டில்லி: 

நாடு முழுவதும் லோக் ஆயுக்தா நீதிமன்றங்கள் அமைப்பது தொடர்பாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்யும்படி உச்சநீதி மன்றம் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற விசாரணையின்போது தமிழகம் உள்பட 12 மாநிலங்களுக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், லோக் ஆயுக்தா வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.  அப்போது, தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரம்மான பத்திரத்தில், மத்திய அரசு லோக்பால் சட்டத்தை இன்னும் இயற்றவில்லை. அதன் காரணமாக தாங்கள் காத்திருப்பதாக தெரிவித்திருந்தது.

இதனால்  கோபமடைந்த நீதிபதிகள், தமிழக அரசு தங்களது கால்களில் நிற்கவில்லையா என்று கேள்வி எழுப்பினர்.

தமிழக அரசு லோக் ஆயுக்தாவை ஏற்படுத்த முயற்சி எடுக்கவில்லை என்று கண்டனம்  தெரிவித்த நீதிபதிகள், தமிழகத்தில்  லோக்ஆயுக்தாவை உடனே அமைக்க வேண்டும் என்றும், இதுகுறித்து ஜூலை 10ந்தேதிக்குள் பதில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

 

பிரதமர், மத்திய அமைச்சர், மாநில முதல்வர்கள், அமைச்சர்கள் மற்றும்  அரசு அதிகாரிகளின் ஊழல்களை விசாரிக்க வகை செய்யும்  வகையில்  கொண்டு வரப்பட்டது லோக்பால் மசோதா. ஆனால், இந்த மசோதா இன்னும் சரியாக அனைத்து மாநிலங்களிலும் அமல்படுத்தவில்லை. அதுபோல லோக்ஆயுக்தா அமைப்பும் அமைக்கப்படவில்லை.

இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதி மன்றம், எத்தனை மாநிலங்களில் லோக் ஆயுக்தா வழக்குகளை விசாரிப்பதற்காக நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளது என்று கேள்வி எழுப்பினர்.

மேலும், இந்தியா முழுவதும் லோக்ஆயுக்தா நீதி மன்றங்கள்  அமைப்பது தொடர்பாக  தமிழகம் உள்பட 12  மாநில தலைமை செயலர்களும் சாக்குபோக்கு எதுவும் கூறாமல், தற்போதைய நிலை குறித்து 2 வாரத்திற்குள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என  உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.