டில்லி

தார் எதிர்ப்புக்குநேரடியாக அணுகியதற்கு மம்தா பானர்ஜிக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

மத்திய பா ஜ க அரசால், அனைத்து நல திட்டங்களுக்கும் ஆதார் அவசியமாக்கப்பட்டுள்ளது.  இதற்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.  மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இதனைக் கடுமையாக எதிர்த்து வருகிறார்.  சமீபத்தில் அவர் தனது மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க முடியாது எனவும்,  அதனால் தனது இணைப்பைத் துண்டித்தாலும் அதற்காக அஞ்சப் போவதில்ல்லை எனவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் மத்திய அரசின் ஆதார் இணைப்பை எதிர்த்து அவர் தனது மேற்கு வங்க அரசு சார்பில் சட்ட விதி எண் 32ன் படி ஒரு வழக்கு மனு அளித்திருந்தார்.   அதில் மத்திய அரசு அனைத்து திட்டங்களுக்கும் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என பிறப்பித்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்ளப் பட்டிருந்தது.   இந்த வழக்கில் மேற்கு வங்க அரசின் சார்பில் பிரபல வழக்கறிஞர் கபில் சிபல் வாதாடினார்.    இந்த வழக்கு நீதிபதிகள் சிக்ரி மற்றும் அஷோக் பூஷனின் அமர்வில் விசாரிக்கப்பட்டது.

சட்ட விதி எண் 32ன் படி தனி நபர் மட்டுமே வழக்கு மனுவை மத்திய அரசுக்கு எதிராக அளிக்க முடியும்.  இதை சுட்டிக் காட்டிய உச்ச நீதி மன்றம் வசக்கறிஞர் கபில் சிபலிடம், “தனி மனிதன் மட்டுமே வழக்கு தொடுக்க முடியும் என சட்டம் இருக்க இதில் மேற்கு வங்க அரசு எப்படி வழக்கு மனு தாக்கல் செய்தது.   திரு கபில் சிபல் அவர்களே எங்களை விட மூத்த வழக்கறிஞரான நீங்கள் எவ்வாறு இதை அனுமதிக்கலாம்.   இந்த கோர்ட் இதனை வன்மையாக கண்டிக்கிறது.  மம்தா தனது அரசின் சார்பில் அல்லாமல் தனது சார்பில் இந்த மனுவை அளிக்கட்டும்.

ஒரு மாநிலம் எப்படி மத்திய அரசின் சட்டத்தை எதிர்த்து நேரடியாக வழக்கு தொடுக்க முடியும்?  நாளை மத்திய அரசு ஒவ்வொரு மாநிலத்தின் சட்டத்தையும் எதிர்த்து வழக்கு தொடுக்க ஆரம்பிக்கும். ”  என தெரிவித்தது.  நீதிமன்றத்தின் கருத்தை ஒப்புக் கொண்ட கபில் சிபல் வழக்கு மனுவை திருத்த ஒப்புக்கொண்டார்.

உச்ச நீதிமன்றம் மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை இஅணைப்பது தொடர்பாக அரசின் விளக்கத்தை கேட்டுள்ளது.   ஆதார் எண்ணைத் தவிர வேறு ஏதேனும் அடையாள அட்டையை ஏன் உபயோகப்படுத்தக் கூடாது எனவும் கேள்வி எழுப்பி உள்ளது.   ஏற்கனவே வங்கிக் கணக்குகளுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு கெடுவை மார்ச் 31 வரை நீடிக்க வேண்டும் என கோரப்பட்ட மனுவுக்கு உச்சநீதிமன்றம் அரசின் விளக்கத்தை கேட்டுள்ளது தெரிந்ததே/