டில்லி

நீதிபதி ரமணாவுக்கு எதிராக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி எழுதிய கடிதம் குறித்து நீதிபதி ரமணா கருத்து தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்ற மூத்த நீதிபதியான என் வி ரமணா குறித்து சமீபத்தில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கடிதம் ஒன்றை எழுதி உள்ளார்.  தனது கடிதத்தில் அவர் தெலுங்கு தேசம் கட்சித்தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவாக நீதிபதி ரமணா செயல்படுவதாக குற்றம் சாட்டி உள்ளார். மேலும் ஆந்திர நீதிமன்ற செயல்பாடுகளில் தனது செல்வாக்கை பய்ன்படுத்தி ஆந்திர அரசுக்கு எதிராக நடப்பதாகவும் தெரிவித்து இருந்தார்.

இந்த கடிதம் கடும் பரபரப்பை ஏற்படுத்தியது.  நீதிபதி ரமணாவுக்கு ஆதரவாகப் பல வழக்கறிஞர்கள் தலைமை நீதிபதிக்குக் கடிதம் எழுதி உள்ளனர்.  ஜெகன்மோகன் ரெட்டி மீது நிதி மோசடி, ஊழல், சுமார் 30க்கும் அதிகமான கிரிமினல் வழக்குகள் உள்ளதால் அவரை பதவியை விட்டு நீக்க வேண்டும் எனப் பிரபல வழக்கறிஞர் ஜி எஸ் மணியம் வழக்கு தொடர்ந்துள்ளார்.

மறைந்த உச்சநீதிமன்ற நீதிபதி லட்சுமணன் இரங்கல் கூட்டத்தில் நீதிபதி ரமணா, “தனக்கு எதிரான அழுத்தங்கள் மற்றும் தடைகளைப் பொறுத்துக் கொள்ள வேண்டியது ஒரு நீதிபதியின் முக்கிய கடமை ஆகும்.  தற்போதைய நிலையில் சுதந்திரமான நீதித்துறைக்கு இது மிகவும் அவசியமான ஒன்றாகும்.

ஒருவர் நல்லபடியாக வாழ மனிதாபிமானம், பொறுமை, கருணை கடின உழைப்பு மற்றும் மற்றவர்களைப் பொறுமையுடன் எதிர்கொள்வது அவசியத் தேவையாகும்.   முக்கியமாக நீதிபதியாக உள்ளோருக்குத் தனது கொள்கையில் பிடிமானமும், முடிவு எடுப்பதில் பயம் இன்மையும் நிச்சயம் தேவைப்படுகிறது” என உரையாற்றி தனது கருத்தை தெரிவித்துள்ளார்.