டில்லி

விபத்தில் சிக்கிக் கொண்ட பலாத்காரம் செய்யப்பட்ட உன்னாவ் பகுதி பெண்ணை டில்லிக்கு விமானம் மூலம் கொண்டு வர உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உ.பி. மாநில பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் குல்தீப் சிங் செங்கார் தன்னை கூட்டு பலாத்காரம் செய்ததாக உன்னாவ் பகுதியை சேர்ந்த ஒரு பெண் புகார் அளித்தார்.   அந்தப் பெண்ணின் தீக்குளிப்பு போராட்டத்துக்கு  பிறகு வழக்கின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.  தற்போது வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.   செங்கார் மற்றும் 12 பேர் சிபிஐ யால கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.

கடந்த வாரம் ரேபரேலிக்கு உறவினரைக் காண அந்தப் பெண் ஒரு காரில் சென்றுக் கொண்டிருந்தார்.  அவருடன் அந்தப் பெண்ணின் வழக்கறிஞர் மற்றும் சில உறவினர்கள் சென்றுக் கொண்டிருந்தனர்.   அப்போது ஒரு லாரி அவர் சென்ற காரில் மோதியதில் பெரிய விபத்து ஏற்பட்டது  இதில் அந்தப் பெண்ணின்  உறவினர் மரணம் அடைந்தார்.  அந்தப் பெண்ணும் வழக்கறிஞரும் அபாய நிலையில் லக்னோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இருவரும் அபாய நிலையில் தொடர்ந்து இருந்து வருவதால் அவர்களை டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை அளிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது.  இன்று நடந்த இந்த மனு மீதான விசாரணையில்  அந்தப் பெண்ணின் தாய் சார்பில் அவர் தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதால் எய்ம்ஸ் மருத்ஹ்டுவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கக் கோரிக்கை விடப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தீபக் குப்தா மற்றும் அநிருத்த போஸ் ஆகியோரின் அமர்வு அந்தப் பெண்ணை லக்னோவில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து விமானம் மூலம்  டில்லி கொண்டு வரப்பட்டு எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்க உத்தரவிட்டுள்ளனர்.  இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை வரும் வெள்ளிக்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.