டெல்லி: நாடு முழுவதும் கொரோனா சோதனைகளுக்கு அதிகபட்ச வரம்பை நிர்ணயிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

பல்வேறு மாநிலங்களில் கொரோனா சோதனைக் கட்டணங்களில் உள்ள வேறுபாடுகளை உச்சநீதிமன்றம் கவனித்து, இந்த விவகாரத்தில் முடிவெடுக்குமாறு மத்திய அரசை கேட்டுக் கொண்டது. மேலும் நோயாளிகளுக்கு சரியான கவனிப்பை உறுதி செய்ய மருத்துவமனைகளை ஆய்வு செய்ய அனைத்து மாநிலங்களும் நிபுணர் குழுவை அமைக்க வேண்டும் என்றும் கூறி உள்ளது.

நீதிபதிகள் அசோக் பூஷண், எஸ்.கே கவுல் மற்றும் எம்.ஆர் ஷா ஆகியோர் அடங்கிய பெஞ்ச், பின்னர் இந்த உத்தரவை நிறைவேற்றும், அனைத்து மாநிலங்களிலும் கொரோனா சோதனைக் கட்டணத்தில் சீரான தன்மை இருக்க வேண்டும் என்று விசாரணையின் போது உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

மத்திய அரசு நிர்ணயிக்கும் கட்டணத்தில் நீதிமன்றம் தலையிடாது என்றும், கட்டண நிர்ணயிப்பிதில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாது என்றும் கூறி உள்ளது. நோயாளிகளின் கவனிப்பு எப்படி இருக்கிறது என்பதை கண்காணிப்பதை உறுதி செய்வதற்காக மருத்துவமனைகளில் சி.சி.டி.வி.களை நிறுவுவதற்கான உத்தரவை பிறப்பிக்க நீதிமன்றம் பரிசீலிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.

டெல்லியில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் கொரோனா சோதனைக்கான விலை வரம்பை ரூ.2,400ஆக மாற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.