டெல்லி: 10, 12ம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்கள் எழுத வேண்டிய எஞ்சிய  தேர்வுகளை ரத்து செய்வது குறித்து பரிசீலிக்குமாறு சிபிஎஸ்இக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

நாடு முழுவதும் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில் பிப்ரவரியில் 12ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வும், மார்ச்சில் 1-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகளும் தொடங்கியது. பின்னர் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது.

ஒத்திவைக்கப்பட்ட 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகளை ஜூலை 1 முதல் ஜூலை 15 வரை நடத்த சிபிஎஸ்இ திட்டமிட்டிருந்தது. இந் நிலையில் தற்போதைய சூழ்நிலையில் தேர்வுகளை ரத்து செய்யக் கோரி அமித் பத்லா என்பவரின் பெற்றோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

கோவிட் வைரஸ் காரணமாக தேர்வை ரத்து செய்ய வேண்டும், வெளிநாடுகளில் உள்ள250 பள்ளிகளில் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்றும் குறிப்பிடப்பட்டது.

இதையடுத்து இந்த மனுவானது இன்று நீதிபதி ஏஎம் கன்வில்கர் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது  10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வில் மீதமுள்ள தேர்வுகளை ரத்து செய்வது குறித்து பரிசீலிக்கவும், இன்டெர்னல் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கவும் அறிவுறுத்தியுள்ளது.