டில்லி

பாஜக அரசு இயற்றிய விவசாய சட்டத்துக்கு எதிராக திமுக தொடர்ந்த வழக்கின் விசாரணை 12 ஆம் தேதி தொடங்குகிறது.

மத்திய பாஜக அரசு இந்த ஆண்டுக்கான மழைக்கால கூட்டத்தொடரில் 3 விவசாய மசோதாக்களைத் தாக்கல் செய்தது.  அவை எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது.  அவற்றுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்து தற்போது சட்டமாக்கப்பட்டுள்ளது.

இதற்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.   நாடெங்கும் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.   அதில் விவசாயிகளும் பெருமளவில் கலந்து கொள்கின்றனர்.   ஆனால் மத்திய பாஜக அரசு இந்த போராட்டங்களைக் கண்டு கொள்ளாமல் இருந்து வருகிறது.

இந்த சட்டத்தை எதிர்த்துக் கடந்த 30 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் திமுக தரப்பில் இருந்து வழக்கு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உச்சநீதிமன்றம் வரும் 12 ஆம் தேதி திங்கள் முதல் விசாரணை தொடங்கும் என அறிவித்துள்ளது.