டெல்லி: பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப்பளித்த சிறப்பு நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்கே யாதவுக்கு அளிக்கப்பட்டிருந்த பாதுகாப்பை நீட்டிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது.

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் பாஜக மூத்த தலைவர் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்ட 32 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் லக்னோ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்கே யாதவ் வழக்கை விசாரித்தார்.

கடந்த செப்டம்பர் 30ம் தேதி தீர்ப்பளித்த எஸ்கே யாதவ், குற்றம்சாட்டப்பட்ட 32 பேரையும் விடுவித்தார். தீர்ப்புக்கு பின்னர் அவருக்கு தரப்பட்டு இருந்த பாதுகாப்பு விலக்கி கொள்ளப்பட்டது. அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த வழக்கை விசாரித்து தீர்ப்பளித்துள்ளதால் பாதுகாப்பை நீட்டிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்துக்கு கடிதம் ஒன்றை எழுதி இருந்தார்.

இந் நிலையில், எஸ்கே யாதவுக்கு அளிக்கப்பட்டிருந்த பாதுகாப்பை நீட்டிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது. இது குறித்து பேசிய நீதிபதி நாரிமன், அவருக்கான பாதுகாப்பை தொடர்வது அவசியம் என்று நாங்கள் கருத வில்லை என்றார்.