சென்னை: பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்களிடம் கலந்து ஆலோசிக்க கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக 5ம் கட்ட ஊரடங்கு தமிழகத்தில் அமலில் உள்ளது. இன்று முதல் தமிழகத்தில் கட்டுப்பாடுகளுடன் பேருந்துகள் இயக்கப்பட்டது.

மேலும் சில தளர்வுகளும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. பேருந்துகள் இயக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்தபடியாக பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தனியார் பள்ளிகள், அரசு உதவி பெறும் மற்றும் அரசு பள்ளி மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கான பொதுமுடக்கத்தால் பள்ளி கல்வியாண்டு துவங்கும் நேரம் தாமதப்படுவதால் தமிழக அரசு பெற்றோர்களிடம் கருத்து கேட்கும் இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.