ஈரோடு: பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்த இறுதி முடிவை முதலமைச்சர் அறிவிப்பார் என்று அமைச்சா் செங்கோட்டையன் கூறி உள்ளார்.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் தொகுதிக்கு உள்பட்ட அயலூா் ஊராட்சியில் வேளாண்மை கூட்டுறவு வங்கியை அமைச்சா் செங்கோட்டையன் துவக்கி வைத்தார். பயனாளிகளுக்கு வணிகக் கடன்களை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் 303 அரசுப் பள்ளி மாணவா்கள் பயன்பெறும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பள்ளிகள் திறக்கும் விவகாரத்தில் மாணவா்களையும், பெற்றோரையும் இந்த அரசு கவனிக்கிறது.

தலைமை ஆசிரியா்கள், பெற்றோர்களின் கருத்துகள் வந்த பின்னர், பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வா் அறிவிப்பார். பள்ளிகள் திறப்பு குறித்து பெற்றோர் தங்கள் கருத்துகளை எழுத்து மூலமாகவும் கொடுக்கலாம் என்றார்.