சென்னை:

ரும் கல்வி ஆண்டில் பள்ளி வேலைநாட்கள் வழக்கமானவதைவிட கூடுதலாக 15 நாட்கள் அதிகரித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

புதிய பாடத்திட்டத்தின் படி, பள்ளிகள் இயங்கும் நாட்கள் 170-லிருந்து 185 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து அமைச்சர் செங்கோட்டையன்  கூறியதாவது, தமிழகத்தில் நடப்பாண்டு முதல் புதிய பாடத்திட்டம் கொண்டு வரப்படுகிறது. முதல்கட்டமாக  நடப்பாண்டில் 1, 6, 9-ஆம் வகுப்பு மற்றும் 11-ஆம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது.

இதன் காரணமாக இந்த கல்வி ஆண்டில் பள்ளியின் வேலை நாட்கள் மேலும் 15 நாள் அதிகரிக்கப்பட்டுள்ளது. பொதுவாக ஒரு கல்வி ஆண்டில் 170 நாட்கள் பள்ளி வேலை நாட்களாக இருககும். ஆனால், இந்த ஆண்டு 185 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும், கல்வி புத்தங்களில் கியூஆர் கோடு எனப்படும் டிஜிட்டல் முறை கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த கியூஆர் (QR Code)  மூலம் மாணவர்கள், தங்கள  புத்தகங்களை ஸ்மார்ட் போனில்  தரவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் கூறினார்.

தமிழக பள்ளியில் பயிலும் 1 முதல் 9-ஆம் வகுப்பு, 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான புதிய பாடப் புத்தகங்கள், இம்மாத இறுதிக்குள் விற்பனைக்கு கிடைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக  தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக நிர்வாக இயக்குநர் டி.ஜெகந்நாதன் தெரிவித்துள்ளார்.

மேலும், பாட புத்தகங்கள் ஆன்லைன் மூலமும் விற்பனை கிடைக்கும் எனவும், தனியார் பள்ளிகள் தங்களுக்கு தேவைப்படும் புத்தகங்களை ஆன்லைனில் பதிவு செய்து அதற்கான கட்டணத்தையும் ஆன்லைனிலேயே செலுத்தி தங்களுக்கு அருகேயுள்ள பாடநூல் கழக மண்டல அலுவலகங்களில் மொத்தமாக பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவித்தார்.