அகமதாபாத்: குஜராத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரிக்க தொடங்கியதால், பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படும் தேதியை மாநில அரசு ஒத்தி வைத்துள்ளது.

நவம்பர் 23ம் தேதி முதல் குஜராத்தில் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், தீபாவளி பண்டிகைக்கு பின்னர் அங்கு தொற்று அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது. ஆகையால் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

அகமதாபாத்தில் கொரோனா தொற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால் அதனை கட்டுப்படுத்தும் வகையில் வார இறுதி முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.நவம்பர் 23ம் தேதி கல்வி நிலையங்களை திறப்பது குறித்து கடந்த 11ம் தேதி பள்ளிக் கல்வித்துறை, சுகாதாரத்துறையுடன் அரசு சார்பில் ஆலோசனை நடத்தப்பட்டது.

அப்போது கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளைக் கடைப்பிடித்து பள்ளிகளில் பாடம் நடத்தலாம் என்று முடிவு செய்யப்பட்டது. தற்போது அந்த முடிவு தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது.