வாஷிங்டன்:

வெளிநாட்டு பயணிகளுக்கு டிரம்ப் விதித்த தடை உத்தரவை நீதிமன்றம் நிறுத்திவைத்துள்ளது.

ஈரான் உள்ளிட்ட 7 முஸ்லிம் நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் நுழைவதற்கு அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டார். இதற்கு உலகம் முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்தது.

இந்நிலையில் இது தொடர்பாக வாஷிங்டன் மாகான சியேட்டில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், டிரம்பின் தடை உத்தரவை நிறுத்தி வைத்து நீதிபதி ஜேமஸ் ராபர்ட் உத்தரவிட்டார். அதிபரின் உத்தரவு அரசியல் சாசனத்துக்கு எதிரானது. அபத்தமானது என்று தெரிவித்தார்.

இந்த உத்தரவை தொடர்ந்து தற்போது விமானநிலையங்களில் 7 நாடுகளின் பயணிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நாடுகளின் பயணிகளை விமானங்களில் அமெரிக்காவுக்கு பயணிக்க அனுமதிப்பதாக சில விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

‘‘நாட்டில் சட்டத்தின் ஆட்சி அமலுக்கு வந்த அற்புதமான நாள் இது’’ என்று வாஷிங்டன் சொலிசிட்டர் ஜெனரல் நோஹ் புர்செல் தெரிவித்துள்ளார்.

அட்டர்னி ஜெனரல் பாப் பெர்கஸன் கூறுகையில்‘‘ நீதிமன்றத்தின் இந்த உத்தரவு உடனடியாக அமல்படுத்தப்பட்டு ஏற்கனனே உள்ள உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

இதைத் தொடர்ந்து போஸ்டன் நீதிமன்றத்திலும் டிரம்பின் தடை உத்தரவுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இந்த நீதிமன்ற உத்தரவு மூலம் சில வெளிநாட்டு குடிமகன்கள் நாட்டிற்கு அனுமதிக்கப்பட்டார். வெர்ஜினியா நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், தடை உத்தரவுக்கு பிறகு தடுத்து நிறுத்தப்பட்ட வெளிநாட்டு பயணிகள் பட்டியலை வெளியிட உத்தரவிட்டது.

முன்னதாக இந்த 7 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்ட 60 ஆயிரம் விசாக்கள் இந்த உத்தரவுக்கு பிறகு காலாவதியாகிவிட்டது. ஆனால் இந்த எண்ணிக்கை ஒரு லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.