சியோல்

கொரோனா இரண்டாம் அலை தொடக்கம் காரணமாக தென் கொரியாவில் அனைத்து  கொண்டாட்டங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆசியாவின் நான்காவது பொருளாதார வளர்ச்சி நாடாகத் தென் கொரியா இருந்து வருகிறது.   உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா நோய்த் தொற்று தென் கொரியாவையும் விட்டு வைக்கவில்லை.  ஆனால் தென் கொரிய அரசு சிறப்பாக செயல்பட்டு கொரோனா பாதிப்பைக் குறைத்தது.  அதையொட்டி உலக நாடுகள் இடையே தென் கொரிய நாட்டுக்குப் பாராட்டு குவிந்தது.

கொரோனா பரவல் குறைந்ததால் தென் கொரியா கட்டுப்பாடுகளைத் தளர்த்தியது.  பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்காக மக்களை பணிக்குச் செல்லவும் வெளிநாட்டினர் வரவும் அனுமதி அளிக்கப்பட்டது.   ஆனால் உலகம் எங்கும் பல நாடுகளிலும் கொரோனா இரண்டாம் அலை தொடங்கி உள்ளது.   தென் கொரியாவிலும் இரண்டாம் அலை தாக்கத்தினால் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இதையொட்டி தென் கொரிய அரசு மீண்டும் கட்டுப்பாடு விதித்துள்ளது.   அத்தியாவசிய கடைகள் மற்றும் அங்காடிகள் தவிர பார்கள், கிளப்புகள் போன்றவை மூடப்பட்டுள்ளன.   ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் தென் கொரியாவில் பல இசை நிகழ்ச்சிகளும்  நடப்பது வழக்கமாகும்.  அவற்றையும் தென் கொரிய அரசு தடை விதித்து நிறுத்தி வைத்துள்ளது.