மதுரை:

யாகம் நடத்தினால் முதல்வராகி விடலாமா? ஸ்டாலினுக்கு கேள்வி விடுத்த  ஓபிஎஸ், தலைமை செலயகத்தில் எனது அறையில் சாமிதாங்க கும்பிட்டேன்.. யாகமெல்லாம் நடத்தலை… என்று விளக்கம் அளித்தார்.

சென்னை தலைமை செயலகத்தில் உள்ள துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அறையில், விடுமுறை தினமான நேற்று அதிகாலை யாகம் நடைபெற்றதாக கூறப்பட்டது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் இல்லாத நாளில் இந்த யாகம் நடைபெற்றதால் சர்ச்சைகைளை எழுப்பியது.

முதல்வராக வேண்டி ஓபிஎஸ் யாகம் நடத்தியதாக கூறப்பட்டது. இதுகுறித்து மு.க.ஸ்டாலின் உள்பட எதிர்க்கட்சி தலைவர்கள் கேள்விகள் எழுப்பியிருந்தனர்.

இந்த நிலையில், தலைமையகத்தில் ஓபிஎஸ் அறையில் நடைபெற்றது என்ன என்பது குறித்து துணைமுதல்வர் ஓபிஎஸ் விளக்கம் அளித்துள்ளார்.

அறை விரிவுபடுத்தப்பட்டு புதுப்பிக்கப்பட்டு உள்ளதால்,  “சாமிதான் கும்பிட்டேன்.  யாகமெல்லாம் செய்யவில்லை” என்று ஓபிஎஸ்  விளக்கம் அளித்துள்ளார்.

இன்று மதுரை சென்றுள்ள ஓபிஎஸ்சிடம் விமான நிலையத்தில் செய்தியாளர்கள், தலைமை  செயலக யாகம் குறித்து கேள்வி  எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த ஓபிஎஸ், தலைமை செயலகத்தில் என்னுடைய அறையில் நான் சாமி கும்பிட்டேன். அவ்வளவுதான். வழக்கம்போலத்தான் சாமி கும்பிட்டேன். யாகமெல்லாம் நடத்தவில்லை. என்னுடைய அலுவலக அறையின் ஜன்னல் கதவு அரித்திருந்தது. இதை சரிசெய்யும் பணிகள் நடைபெற்றன. பொதுவாக இப்படி செப்பனிடும் பணிகள் நடைபெற்றால், அதற்கு என்ன பூஜைகள் செய்யப்படுமோஅதைதான் நான் செய்தேன்.

முதல்வராக வேண்டும் என்றுதான் யாகம் நடத்தினேன் என்று ஸ்டாலின் சொல்லுகிறார். அப்படியென்றால் நான் மட்டும்தானா யாகம் நடத்துவேன்? எல்லோரும்தான் யாகம் நடத்து வார்களே? யாகம் நடத்தினால், முதல்வராகிவிடலாம் என்று ஸ்டாலின் நம்புகிறாரா?” என்று காட்டமாக கேள்வி எழுப்பினார்.