சென்னை:
சாத்தான்குளம்  தந்தை மகன் உயிரிழந்த விவகாரம் குறித்து இன்று விசாரணை நடத்திய  உயர்நீதி மன்றம் மதுரை கிளை, சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமாரிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பிய நிலையில், சாட்சியம் அளித்த சாத்தான்குளம் பெண் காவலருக்கு பாதுகாப்பு வழங்க உத்தர விட்டதுடன்  சிபிசிஐடியின் துரித நடவடிக்கைக்கு பாராட்டும் தெரிவித்தனர்.

சாத்தான்குளத்தில் தந்தை, மகன் உயிரிழந்தது தொடர்பான வழக்கு இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், தந்தை மகன் கொலை வழக்கில் சாட்சியம் அளித்த பெண் காவலருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். மேலும் ஊதியத்துடன் விடுப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.  மேலும்.  சாத்தான்குளம் தலைமைக் காவலர் ரேவதியின் பாதுகாப்பை போலீசார் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் மீண்டும் வலியுறுத்தினர்.
மேலும், விசாரணைக்கு ஆஜரான சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமாரிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.
அதைத்தொடர்ந்து, நீதிமன்றத்தில் 5 காவலர்களை கைது செய்தது எப்படி என்று சிபிசிஐடி போலீசார் விளக்கம் அளித்தனர்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் இந்த வழக்கு சம்பந்தமாக எத்தனை பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது?.  கைது செய்தவர்களை எந்த நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த உள்ளீர்கள் எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மேலும் 5 காவலர்களை கைது செய்த சிபிசிஐடிக்கு பாராட்டு தெரிவித்த நீதிபதிகள், கேஸ் டைரி குறித்த முக்கியமான தகவல்களை நாங்கள் எதிர்பார்க்கவில்லை என்றும்,  நீதி நிலைநாட்டப்படும் என்ற நம்பிக்கையை சிபிசிஐடி உருவாக்கியுள்ளது.
சிபிசிஐடியின் அதிரடி நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்த உயர்நீதிமன்ற நீதிபதி பி.என்.பிரகாஷ்,  தமிழக போலீசார் மீது ஏற்பட்டுள்ள  சேதத்தை சரிசெய்ய ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.  விசாரணை சரியான திசையில் சென்றால், சிபிஐக்கு  வழக்கை ஒப்படைப்பதற்கான முடிவை ரத்து செய்ய முடியும் என்றும், காவல்துறையினர் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்,  பாதிக்கப்பட்ட தந்தை, மகன் குடும்பத்துக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் சிபிசிஐடியின் நடவடிக்கை அமைந்துள்ளது என்று வாழ்த்து தெரிவித்தனர்.