கொரோனாவுக்கு ஆளும் கட்சி எம்.எல்.ஏ. பாதுகாவலர் பலி..

ஆந்திர மாநிலம் தர்மாவரம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக இருப்பவர் வெங்கட்ராமி ரெட்டி. ஆளும் கட்சியான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்.

அவரிடம் 12 ஆண்டுகளாகப் பாதுகாவலராக பணியாற்றி வந்தவர் கொரோனா நோய்க்கு நேற்று உயிர் இழந்தார்.

15 நாட்களாகவே அவருக்கு நோய் அறிகுறி இருந்துள்ளது. ஆனால் யாரிடமும் சொல்லாமல் மறைத்து விட்டார். நோயின் தாக்கம் முற்றியதால் இரு தினங்களுக்கு முன்பு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

அதில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அந்த பாதுகாவலர் நேற்று இறந்தார்.

எம்.எல்.ஏ. அலுவலகத்தில் பணியாற்றும் மேலும் 3 பாதுகாவலர்கள்  மற்றும் 3 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் அவர்கள் 6 பேரும் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எம்.எல்.ஏ. வெங்கட்ராமி ரெட்டி, தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

‘’ தயவு செய்து கொரோனா அறிகுறி இருந்தால் மறைக்கவேண்டாம், உடனடியாக பரிசோதனை செய்து கொள்ளுங்கள் ‘’ என எம்.எல்.ஏ.ரெட்டி, தொகுதி மக்களுக்கு  வேண்டுகோள் விடுத்துள்ளார்.