டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மீது காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தியிருப்பது நாட்டுக்கே ஏற்பட்ட பெரும் தலைகுனிவாகும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக  சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சபர்மதி விடுதிக்குள் ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்த முகமூடி அணிந்த சமூகவிரோதிகள் மாணவர்கள் மீது காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் தொடுத்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.

இது ஒட்டுமொத்த நாட்டுக்கே ஏற்பட்ட பெரும் தலைகுனிவாகும். விடுதி கட்டண உயர்வு தொடங்கி குடியுரிமைச் சட்டத்திருத்தம் வரை அநீதிக்கெதிராக களத்தில் சமரசமற்று நிற்கும் மாணவப்பிள்ளைகளுக்கு ஆளும்வர்க்கத்தால் நேரடியாக விடப்பட்டிருக்கிற கொலைமிரட்டல்; அச்சுறுத்தல் !

தாக்குதலில் ஈடுபட்ட கொடுங்கோலர்களை உடனடியாக கடுஞ்சட்டத்தின் கீழ் கைதுசெய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.