சீர்காழி தாேணியப்பர் ஆலயம்.

சீர்காழி (பிரம்மபுரம்)  என்னும் ஊரில் சிவன் சுயம்பு மூர்த்தியாக அமர்ந்து அருள்பாலிக்கும் அருள்தரும்  பெரியநாயகி, (திருநிலைநாயகி) அம்பாள் உடனுறை அருள்மிகு தோணியப்பர் (சட்டைநாதர்) (பிரம்மபுரீஸ்வரர்) சுவாமி ஆலயம்.

மயிலாடுதுறை மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து மாயவரம் செல்லும் சாலையில் சுமார் 1000-2000 வருடங்களுக்கு மேல் மிக பழமை வாய்ந்த, காவிரி வடகரைத்தலங்களில் 14 வது தலமாகவும் தேவாரபாடல் பெற்ற  274 தலங்களில் 14 வது தலமாகவும் விளங்கும்,  சீர்காழி

சமயக்குரவர்களில் ஒருவரான திருஞானசம்பந்தர், இவ்வூரில் வசித்து வந்த சிவபாத இருதயர்- பகவதி அம்மையார் தம்பதியரின் மகனாகப் பிறந்தார். இவரை முருகனின் அம்சம் என்றும், இளைய பிள்ளையார் என்றும் வழங்குவர்.   இவர் தனது மூன்றாவது வயதில் தந்தையுடன் இத்தலத்திலுள்ள பிரம்ம தீர்த்தத்தில் நீராட வந்தார்.

தந்தை இவரை குளக்கரையில் உட்காரவைத்து விட்டு, தான் மட்டும் நீராடச் சென்றார். அப்போது சம்பந்தருக்கு பசி ஏற்பட, “அம்மா! அப்பா!’ என அழுதார். இவரது அழுகுரல் கேட்ட சிவன், பார்வதியை நோக்கி குழந்தையின் பசிக்கு பால் கொடுக்குமாறு கூறினார்.

அதன்படி சிவனுடன் சம்பந்தருக்கு தரிசனம் தந்து மெய்ஞானம் கலந்த பாலை புகட்டினாள் அம்பிகை. பசி தீர்ந்த சம்பந்தர் வாயில் பால் வழிய அமர்ந்து விட்டார். குளித்து விட்டு வந்த தந்தை, “”பால் கொடுத்தது யார்? யாராவது ஏதாவது கொடுத்தால் வாங்கிச் சாப்பிடக்கூடாது என்பது உனக்குத் தெரியாதா? அபச்சாரம் செய்து விட்டாயே,” எனச்சொல்லி குச்சியால் சம்பந்தரை அடிக்க கையை ஓங்கினார்.

அப்போது சம்பந்தர், சிவனும் பார்வதியும் தரிசனம் தந்த திசையை காட்டி, “”தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதிசூடி காடுடைய சுடலைப்பொடி பூசி என் உள்ளம் கவர் கள்வன் ஏடுடைய மலரான் உனை நாட்பணிந்தேத்த அருள்செய்த பீடுடைய பிரம்மாபுரம் மேவிய பெம்மான் இவனன்றே” என்று பாடினார்.

தந்தை அசந்து போனார். தன் குழந்தைக்கு இறைவனே காட்சி தந்து பாலூட்டியது அறிந்து பரவசப்பட்டார். இத்தலத்தைபற்றி சம்பந்தர் 67 பதிகங்களும், திருநாவுக்கரசர் 3 பதிகங்களும், சுந்தரர் ஒரு பதிகமும் பாடியுள்ள தலமாகவும் விளங்கும்