இளம் விக்கெட் கீப்பராக களமிறங்கியிருக்கும் ரிஷப் பண்டிற்கு உதவும் வகையில், மாற்று ஏற்பாட்டின் அடிப்படையில், இதர 3 விக்கெட் கீப்பர்களை கண்டறியும் பணியில் தேர்வு கமிட்டி ஈடுபட்டிருப்பதாக அதன் தலைவர் எம்எஸ்கே பிரசாத் தெரிவித்தார்.
உலகக்கோப்பை தொடர் முடிந்தவுடன் விக்கெட் கீப்பராக இருந்த தோனி ஓய்வில் சென்றதையடுத்து, அவரின் இடத்தை நிரப்புவதற்கு தேர்வுசெய்யப்பட்டவர் இளம் வீரர் ரிஷப் பன்ட்.
இதனையடுத்து அவரின் செயல்பாடுகள் தற்போது தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளன. அவர் தற்போது அனைத்துவகை கிரிக்கெட்டிலும் இந்தியாவின் விக்கெட் கீப்பராக செயல்பட்டு வருகிறார்.
ஆனால், உலகக்கோப்பைக்கு பிறகு அவர் பஙகேற்ற போட்டிகளில் அவரின் பேட்டிங் செயல்பாடுகள் சொல்லிக்கொள்ளும் வகையில் இல்லை. ஆனாலும் அவரின் விஷயத்தில் பொறுமை காக்க தயாராக இருப்பதாக எம்எஸ்கே பிரசாத் அறிவித்துள்ளார்.
“உலகக்கோப்பைக்கு பின்னர் ரிஷப்பிற்கு போதுமான அவகாசம் தர முடிவுசெய்துள்ளோம். அவரிடம் இருக்கும் அபார திறமையை கணக்கில் கொண்டுள்ளோம். எனவே, சற்று பொறுமையாக இருக்க முடிவு செய்துள்ளோம். அதேசமயம் அவரின் பணிப்பளுவை கருத்தில்கொண்டு வேறு விக்கெட் கீப்பர்களை கண்டறியும் பணியிலும் தேர்வு கமிட்டி ஈடுபட்டுள்ளது” என்றார்.