சென்னை: ஆயிரம் விளக்கு தொகுதி தற்போதைய தி.மு.க. எம்.எல்.ஏ. கு.க.செல்வம் இன்று மாலை டெல்லியில் பாஜக தலைவர் ஜே.பி. நட்டா முன்னிலையில், பாஜகவில் இணைவதாக தகவல்கள் பரவிய நிலையில், தான் பாஜகவில் இணையவில்லை என்று அறிவித்து உள்ளார்.

திமுக தலைமை மீதான அதிருப்தி காரணமாக சமீப நாட்களாக கட்சி பணிகளில் இருந்து ஒதுங்கி இருந்த ஆயிரம்விளக்கு தொகுதி திமுக எம்எல்ஏ குகசெல்வம், திடீரென பாஜக மாநில தலைவர்7 முருகனுடன் டெல்லி பறந்தார். இது  திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை மேற்கொண்டதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில், தான் பாஜகவில் இணையவில்லை என்று கு.க. செல்வம் தெரிவித்து உள்ளார்.

தனது தொகுதி தொடர்பான கோரிக்கைகளை மத்திய அமைச்சர் பியூஷ் கோயலிடம் தெரிவிக்கவே டெல்லி வந்ததாக கூறியவர்,  நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இரண்டு லிஃப்ட் அமைப்ப தற்காகவே பியூஷ் கோயலை சந்திக்க சென்றதாக தெரிவித்து உள்ளார்.

மேலும், இந்துக்களையும், முருக பெருமானை  அவமதித்தவர்களையும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

காங்கிரஸ் மற்றும் காந்தி குடும்பத்துடனான அனைத்து உறவுகளையும் ஸ்டாலின் துண்டிக்க வேண்டும் என்றும்,  கட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்றும் என்றும் வலியுறுத்தினார்.

தற்போது எம்எல்ஏவாக உள்ள கு.க.செல்வம், பாஜகவில் இணைந்தால், கட்சித்தாவல் சட்டப்படி அவரது பதவி பறிபோகும் வாய்ப்பு உள்ளது. இதனால், அவர் தனது பதவியை தானாகவே  இழக்க விரும்பவில்லை என்று தெரிகிறது. அதனால், திமுக தலைமையே தன்னை கட்சியை விட்டு வெளியேற்றும் என எதிர்பார்ப்பது போல் உள்ளது அவரது நடவடிக்கைகள்.