சென்னை: பொறியியல் மாணவர்கள் செமஸ்டர் கட்டணத்தை செலுத்த அக்டோபர் 29வரை அவகாசம் நீட்டிப்பு செய்து  அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
கொரோனா பொதுமுடக்கம் காரணமாக மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதுடன், கல்வி நிலையங்களும் மூடப்பட்டு உள்ளன. இந்த நிலையில், பொறியியல் மாணவர்கள் செமஸ்டர் தேர்வு  கட்டணத்தை செப்டம்பர் மாதம் 5ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என கடந்த ஆகஸ்டு மாதம் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்தது. மேலும், கட்டணம் கட்டத்  தவறினால் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம் செய்யப்படும் என்றும் எச்சரிக்கை செய்தது.
பொதுமுடக்கம் காரணமாக  மக்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி இருந்த நிலையில், கட்டணத்தை உடனே கட்ட அண்ணா பல்கலைக்கழகம் வலியுறுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தி யது. இது தொடர்பாக,  மாணவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
இதுதொடர்பான விசாரணையின்போது, கொரோனா முடக்கம் காரணமாக கல்விநிறுவனங்கள் மூடப்பட்டு உள்ள நிலையில்,  பயன்படுத்தாத லேப் உள்பட தேர்வு  கட்டணம் செலுத்த சொல்லி கல்லூரி வற்புறுத்துவதாக தெரிவிக்கப்பட்டது.  அதைத்தொடர்ந்து, செமெஸ்டர் தேர்வு கட்டணத்தை செலுத்துவதற்கான கால அவகாசத்தை செப்.19 வரை கால அவகாசத்தை நீட்டிப்பதாக அண்ணா பல்கலைக்காகம் அவகாசம் வழங்கியது. பின்னர், அவகாசம் தேதியை அக்டோபர் 9ந்தேதி வரை நீட்டிப்பதாக அறிவித்து,.
இந்த நிலையில், இன்று வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், தேர்வு கட்டணம் செலுத்துவதற்கான அவகாசம், அக்டோபர் 29 வரை  வழங்குவதாக அறிவித்துள்ளது.
3 ஆவது முறையாக தற்போது செமஸ்டர் கட்டணத்தை செலுத்த கால அவகாசம் நீடிக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.