கவுகாத்தி:

பங்களாதேஷை சேர்ந்தவர் என்ற சந்தேகத்தின் பேரில் சிறை வைக்கப்பட்ட அசாமை சேர்ந்தவர் உயிரிழந்தார். உடலை பங்களாதேஷுக்கு அனுப்புங்கள் என்று கூறி, உடலை வாங்க உறவினர்கள் மறுத்துவிட்டனர்.


பங்களாதேஷிலிருந்து சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் வந்ததாகக் கூறி 58 வயதான பாசுதேவ் பிஸ்வாஸ் என்பவர் கைது செய்யப்பட்டு தேஜ்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

அசாமை சேர்ந்தவரான இவர் உடல் ஊனமுற்றவர். இவருக்கு மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். டீக்கடை நடத்தி வந்த அவரை தவறுதலாக கைது செய்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சிறையில் உடல் குன்றிய அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது இறந்துவிட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க வந்தனர். அந்த உடலை பங்களாதேஷுக்கே அனுப்புங்கள் என்று கூறி உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தினர்.

போலீஸ் ஸ்டேஷனை அவர்கள் முற்றுகையிட்டபோது, போலீஸாரும் பாரா மிலிட்டரி படையினரும் தடியடி நடத்தி அமைதியை ஏற்படுத்தினர்.

இதனையடுத்து, உறவினர்களை உள்ளூர் பிரமுகர்கள் சமாதானப் படுத்தியதையடுத்து, உடலை பெற்றுக் கொண்டு உறவினர்கள் அடக்கம் செய்தனர்.