மும்பை: இந்திய பங்குச் சந்தை வரலாற்றில் முதல்முறையாக சென்செக்ஸ் 47,362 புள்ளிகளை தொட்டு மாபெரும் சாதனை படைத்துள்ளது பங்கு வர்த்தகம். இது வர்த்தகர்களிடையே மகிச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே கடந்த 17ந்தேதி (டிசம்பர் 17) முதல்முறையாக 46,822 புள்ளிகளைக் கடந்து சென்செக்ஸ் சாதனை படைத்துள்ளது. மும்பைப் பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 155 புள்ளிகள் உயர்ந்து 46,822 புள்ளிகளில் வர்த்தகமாகியுள்ளது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 47 புள்ளிகள் அதிகரித்து 13,727 புள்ளிகளைத் தொட்டது. இந்த நிலையில், தற்போது மேலும் உயர்ந்து வரலாற்று சாதனை படைத்துள்ளது.

வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று (திங்கட்கிழமை)  காலையில், சென்செக்ஸ் துவங்கிய போதே 160 புள்ளிகள் உயர்வுடன் துவங்கி 47,153 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. பின்னர்  மேலும் உயர்ந்து 47,362 புள்ளிகளை தொட்டது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 122 புள்ளிகள் அதிகரித்து 13,871 புள்ளிகளை தொட்டது.  இது வரலாற்று சாதனையாக கூறப்படுகிறது.

அமெரிக்காவில் ஒப்புதல் பெறப்பட்டு உள்ள பொருளாதார ஊக்குவிப்புத் திட்டம், ஆசிய சந்தை சூழல் எதிரொலியாகவே சென்செக்ஸ் வேகமாக உயர்ந்துள்ளதாக  வர்த்தகர்கள் தெரிவித்து உள்ளனர்.

நிஃப்டி குறியீடு இன்று காலை வர்த்தகத்தில் அதிகப்படியாக 120 புள்ளிகள் வரையில் உயர்ந்து 13,865.45 புள்ளிகளை அடைந்துள்ளது. இதைத் தொடர்ந்து நிஃப்டி மிட்கேப் 50 குறியீடு 1.38 சதவீதமும், நிஃப்டி ஆட்டோ 1,16 சதவீதமும், நிஃப்டி பேங்க் 1.07 சதவீதமும் வளர்ச்சி அடைந்துள்ளது.

சென்செக்ஸ் டாப் 30 நிறுவனங்கள் அமெரிக்காவில் பொருளாதார ஊக்குவிப்புத் திட்டம் ஒப்புதல் பெற்றுள்ளது இந்திய வங்கிகளுக்கு மிகவும் சாதகமாக அமைந்துள்ளது.