சென்னை,

பொதுப்பணித் துறையில் இருந்து, நீர் வளத்துறையை பிரித்து, தனித் துறையாக்க, தமிழக அரசு தீர்மானித்துள்ளது.

தமிழக அரசின் பொதுப்பணித் துறையில், கட்டடங்கள், நீர்வளத் துறை, நீராய்வு நிறுவனம், கொதிகலன் இயக்கம் உட்பட, பல பிரிவுகள் செயல்படுகின்றன. கட்டடங்கள் பிரிவின் கீழ், உயர் நீதிமன்றம், அரசு பொது மருத்துவமனை உட்பட,  பல்வேறு அரசுத் துறை கட்டடங்கள் பராமரிக்கப்படுகின்றன. நீர் வளத்துறையின் கீழ்,  அணைகள், ஏரிகள், கால்வாய்கள் பராமரிப்பு, நீர்வழித்தடங்களை மேம்படுத்துதல்  போன்றவை வருகின்றன.

வேறு பல மாநிலங்களில்  நீர்வளத்துறை தனியாக செயல்படுகிறது. அதுபோல இங்கும் பிரிக்க வேண்டும் என்று  நீண்ட காலமாக கோரிக்கைவிடப்பட்டு வருகிறது.

தவிர, விரைவில், நாடு முழுவதும் நதிகள் இணைப்பு திட்டத்தை, மத்திய அரசு துவக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஆகவே மத்திய அரசின் உத்தரவுப்படி, பொதுப்பணித்துறையில் இருந்து நீர்வளத்துறை பிரிக்கப்பட்டு, தனித்துறையாக அறிவிக்க மாநில அரசு தீர்மானித்துள்ளது.

இதனால் துறைக்கு நிதி ஒதுக்கீடு அதிகரிக்கும். மேலும், நீர் நிலைகள், நீர் வழித்தடங்களை மேம்படுத்தும் பணிகளையும், விரைந்து முடிக்க வாய்ப்பு ஏற்படும் என்று நீர் மேலாண்மை ஆலோசகர்கள் தெரிவிக்கிறார்கள்.