புதுடெல்லி: டெல்லி மாநிலத்திற்கென தனியாக பள்ளி கல்வி வாரியம் ஒன்றை அமைக்க, டெல்லி அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

டெல்லியில் தற்போது 1,000க்கும் அதிகமான அரசு பள்ளிகளும், 1,700க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன. இந்தப் பள்ளிகள் அனைத்தும், சிபிஎஸ்இ எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.

டெல்லிக்கு என்று தனியான பள்ளி கல்வி வாரியம் அமைக்க முதல்வர் கெஜ்ரிவால் விரும்பினார். இந்நிலையில், டெல்லி அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில், டெல்லிக்கென்று தனி கல்வி வாரியத்தை, வரும் கல்வியாண்டு முதல் அமைப்பதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

இதுதொடர்பாக, டெல்லி மாநில முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் கூறியதாவது, “டெல்லியில், வரும் கல்வியாண்டு முதல், தனியாக ஒரு பள்ளி கல்வி வாரியம் அமைக்கப்படும். இதில், 2,025 பள்ளிகள் இணைக்கப்படும். தனி பள்ளி கல்வி வாரியம் அமைக்கப்பட்டால், அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்தி, உள்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்த முடியும்” என்றார் அவர்.