திருப்பதி,

திருப்பதி திருமலை ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களின் கூட்ட நெரிசலை தடுக்கும் வகையில் கோவிலுள் உள்ளே செல்வதற்கும், வெளியே வருவதற்கும் தனித்தனி வழிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து தேவஸ்தானம்  விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

கோவிலுக்கு வரும் பக்தர்களின் கூட்ட நெரிசலை தடுக்கும் வகையில்,  தரிசன வரிசையில் மாற்றம்செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஏற்கனவே சாமி தரிசனம் செய்ய செல்லும் பக்தர்கள் உள்ளே செல்வதற்கும், வெளியே வருவதற்கும் ஒரே வழி இருந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு பக்தர்களிடையே அடிக்கடி தள்ளுமுள்ளு ஏற்படும் நிலை இருந்து வந்தது.

அதை சரிசெய்யும் வகையில்‌, தரிசனம் செய்து வெளியே வரும் இடத்தில் உள்ள வெள்ளி கதவின் வலது திசையில் 15 முதல் 20 அடி உயரத்திற்கு இரும்பு படி அமைத்து பிரசாதங்கள் வழங்கும் இடம் அருகே வெளியே வரும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தான அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.