சென்னை

காதலிக்க மறுத்ததால் தனியார் மருத்துவ கல்லூரி மாணவியின் வீட்டில் புகுந்து கொலை மிரட்டல் விடுத்த நடிகை ‘பூனைக்கண்’ புவனேஸ்வரியின் மகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை திருமங்கலம் பகுதியை சேர்ந்த 23 வயதான இளம் பெண் ( பெயர் தவிர்க்கப்பட்டுள்ளது.)  கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் பல் மருத்துவ கல்லூரியில் பயின்று வருகிறார். சில மாதங்களுக்கு முன் சமூகவலைதளமான முகநூலில் மிதுன் சீனிவாசன் என்ற பொறியியல் கல்லூரி மாணவர் அறிமுகமாகியிருக்கிறார். நாளடைவில் நட்புடன் பழகியிருக்கிறார்கள்.

இந்த நிலையில் மிதுன், நடிகை புவனேஸ்வரியின் மகன் என்பது மாணவிக்கு தெரிய வந்தது.  புவனேஸ்வரி சில  திரைப்படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்தவர். இவர் மீது விபசார வழக்குகள் உண்டு. மேலும் மிதுன் மீது இலங்கையை சேர்ந்த இளம் பெண்ணை போதை பழக்கத்திற்கு அடிமையாக்கி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக வழக்கு இருப்பதையும் அந்த கல்லூரி மாணவிக்கு தெரியவந்தது.

இதையடுத்து மிதுன் சீனிவாசனுடன் பழகுவதை மாணவி நிறுத்தினார்.  இதன் பிறகு மாணவியை செல்போனில் தொடர்பு கொண்ட மிதுன் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தியிருக்கிறார். அதை அந்த மாணவி ஏற்கவில்லை.

இந்த நிலையில் மாணவியின் வீட்டிற்கு சென்ற மிதுன்,  தன்னை காதலிக்கவில்லை என்றால் நுங்கம்பாக்கத்தில் கொலை செய்யப்பட்ட சுவாதி நிலை ஏற்படும் என்று மிரட்டியதாகவும், பெட்ரோல் ஊற்றி எரித்து விடுவதாக  மிரட்டியதாகவும்  மாணவியின் பெற்றோர் திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதையடுத்து மருத்துவ மாணவிக்கு கொலை மிரட்டல் விடுத்த புகாரில் பெண்கள் வன்கொடுமை தடுப்பு, கொலை மிரட்டல் உட்பட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து நடிகை புவனேஸ்வரியின் மகன் மிதுனை காவல்துறையினர்  கைது செய்தனர்.

சென்னை ஆதம்பாக்கத்தில் காதலிக்க மறுத்த இளம்பெண் இந்துஜா எரிக்கப்பட்டு உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.