டெல்லி:

உ.பி மாநிலம் உன்னாவ் பகுதியைச் சேர்ந்த  சேர்ந்த 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் பாஜக எம்எல்ஏ மீது தொடரப்பட்ட வழக்கில் டெல்லி சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கவுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக , பாஜக எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கார்  கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டுள்ளார். இதையடுத்து அவர் பாரதிய ஜனதா கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டார்.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி, தனது வழக்கறிஞர்கள், உறவினர்களுடன் காரில் சென்ற போது லாரி மோதியதில் உறவுக்கார பெண்கள் 2 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து பாதிக்கப்பட்ட சிறுமியை கொல்ல நடந்த சதி என்று குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விபத்து குறித்தும் உச்சநீதி மன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து,  அப்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு விசாரித்து, உன்னாவ் சிறுமி பாலியல் வன்கொடுமை, விபத்து, மற்றும் அதன் தொடர்புடைய வழக்கு என மொத்தம் 5 வழக்குகளையும் டெல்லிக்கு மாற்ற உத்தரவிட்டதுடன் சிபிஐ விசாரணைக்கும் உத்தரவிட்டது.

இதையடுத்து வழக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்து. வழக்கின் வாதங்கள் முடிவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று டெல்லி நீதிமன்றம்  அறிவித்துள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.