டில்லி

நேற்று நடந்த தாக்குதலை நடத்தியதுபாஜகவோ காங்கிரஸோ இல்லை இந்தியா நடத்தியது என காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கூறி உள்ளார்.

இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தி ஜெய்ஷ் ஈ முகமது பயங்கர வாத இயக்க முகாம்களை அழித்ததற்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்த விஷயத்தில் அரசின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிக்க அனைத்துக் கட்சிகளும் முன் வந்துள்ளன. அத்துடன் பல உலகத் தலைவர்களும் இந்திய விமானப் படைக்கு தங்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர், “இந்திய விமானப்படை தாக்குதலுக்காக ஒவ்வொரு இந்தியனும் பெருமை அடைய வேண்டும் இந்த தாக்குதலையும் அரசியல் ஆக்க நினைப்பவரை நாம் ஒதுக்க வேண்டும். கட்சியை விட அரசியல் தகராறுகளை விட நமது நாடுதான் முக்கியம் என்பதை நாம் எப்போதும் மறக்கக் கூடாது.

இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் இந்த இந்திய விமானப்படை தாக்குதலுக்காக ஒரு குறிப்பிட்ட கட்சியையோ அல்லது ஒரு அரசியல் தலைவரையோ மட்டும் புகழ்வது சரியானது இல்லை. இவ்வாறு செய்வது அறிவற்ற செயலாகும். இந்த தாக்குதலை நடத்தியது பாஜக அல்லது காங்கிரஸ் இல்லை. இதை நடத்தியது இந்தியா” என தெரிவித்துள்ளார்.