பாட்னா: பாரதீய ஜனதாவிலிருந்து தான் விலகுவதாக கூறியுள்ள நடிகர் சத்ருகன் சின்ஹா, காங்கிரசே உண்மையான தேசிய கட்சி என்பதால், தான் அக்கட்சியில் இணையவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

பீகாரின் பட்னா சாகிப் நாடாளுமன்ற தொகுதியின் நடப்பு பா.ஜ.க. உறுப்பினராக இருக்கும் சத்ருகன் சின்ஹா, அக்கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும், உண்மையான தேசியக் கட்சி என்பதால், காங்கிரசில் சேர முடிவெடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

பாரதீய ஜனதாவிலிருந்து விலகுவது, வலி மிகுந்த ஒன்றுதான் எனக் கூறியுள்ள அவர், காங்கிரஸ் கட்சியில் சேருமாறு, தன்னுடைய நண்பர் லாலு பிரசாத் யாதவ்தான் ஆலோசனை கூறியதாக தெரிவித்துள்ளார்.

மேலும், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, அருண்ஷோரி மற்றும் யஷ்வந்த் சின்ஹா போன்ற கட்சிக்குப் பாடுபட்ட தலைவர்கள் இன்று நடத்தப்படும் விதம் தனக்கு மிகுந்த வேதனையளிப்பதாக அவர் தனது கவலையைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

இந்தமுறை பட்னா சாகிப் தொகுதியில் போட்டியிட்டு, அதிக வாக்குகள் வித்தியாசத்தில், மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிராசத்தை வீழ்த்துவேன் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

– மதுரை மாயாண்டி