கொச்சி:
கேரளாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தற்போது ஷிகெல்லா என்ற புதிய வகை தொற்று நோய் பரவி வருவதால், அம்மாநில மக்கள் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர்.

கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், அங்கு கொரோனா விதிகள் கடுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளன. சபரிமலைக்கு வரும் பக்தர்கள், முன்பதிவு செய்திருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். மேலும், நாளொன்றுக்கு 2 ஆயிரம் பேர் வரை மட்டுமே சபரிமலைக்கு செல்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சூழலில், கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் ஷிகெல்லா என்ற புதிய வகை தொற்று நோய் பரவி வருகிறது. மனிதக்கழிவு, அதில் கலக்கும் தண்ணீர் மூலம் இந்நோய் பரவி வருவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொரோனாவை போன்று பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து மற்றவருக்கும் இந்நோய் பரவி வருவதால், கோழிக்கோட்டில் வசித்து வரும் மக்கள் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இந்தச் சூழலில், இந்நோய் தாக்குதலுக்கு ஆளான 11 வயது சிறுமி உயிரிழந்துள்ளார். மேலும், 50-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அனைத்து வயதினரையும் இந்நோய் தாக்கி வருவதால், வீடு, வீடாகச் சென்று சுகாதாரத் துறையினர் நோய் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.