புனே: மகாராஷ்டிராவில் சிவசேனா எம்பி ஒருவர் தமது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி போலீசில் புகார் அளித்துள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் பர்பானி லோக்சபா தொகுதி சிவசேனை எம்பி சஞ்சய் ஜாதவ், உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி புகார் அளித்துள்ளார். தமது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்த வேண்டுமென மகாராஷ்டிரத்தில் ஒரு கும்பலுக்கு ரூ. 2 கோடி வழங்கப்பட்டுள்ளதாகவும் புகாரில் கூறி உள்ளார்.
பர்பானி மாவட்டத்தில் உள்ள நானல்பாத் காவல் நிலையத்திற்கு சஞ்சய் ஜாதவ் ஆதரவாளர்களுடன் சென்று புகார் தெரிவித்துள்ளார். இதையடுத்து, விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதம், பர்பானி தொகுதியின் ஜிந்தூரில் வேளாண் உற்பத்தி சந்தையின் நிர்வாகக் குழுவில் தேசியவாத காங்கிரசுக்கு பிரதிநிதித்துவம் அளித்ததை எதிர்த்து சஞ்சய் ஜாதவ் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
பின்னர் மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே இந்த விவகாரத்தை ஆராய்வதாக உறுதியளித்ததை அடுத்து, ஜாதவ் ராஜினாமாவை வாபஸ் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.