மும்பை

காராஷ்டிர மாநில ஆளுநரை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என சிவசேனா கட்சி வலியுறுத்தி உள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தை ஆளும் சிவசேனா கட்சி மற்றும் ஆளுநர் பக்த் சிங் கோஷ்யாரி இடையே க்டும் பிரச்சினை நிலவி வருகிறது.    பாஜக மற்றும் சிவசேனா கூட்டணி உடைந்து காங்கிரஸ் மற்றும் தேசிய வாத காங்கிரஸ் கட்சிகளுடன் சிவ்சேனா கூட்டணி அரசு அமைத்ததில் இருந்தே இந்த பிரச்சினை ஒன்றன்பின் ஒன்றாக அதிகரித்து வருகின்றது.   இதில் பாஜகவினர் ஆளுநருக்கு ஆதரவாகக் கருத்து கூறி வருகின்றனர்.

இந்நிலையில் சிவசேனா கட்சியின் அதிகாரப் பூர்வ நாளேடான சாமனா பத்திரிகையின் தலையங்கத்தில்,

”சமீபத்தில் மகாராஷ்டிர ஆளுநர்பகத்சிங் கோஷ்யாரி மாநில அரசு விமானத்தில் டேராடூன் செல்ல விரும்பினார். இதற்கு அரசு அனுமதி அளிக்கவில்லை.  எனவே இதனை பாஜக ஒரு பிரச்சினையாக்க விரும்புகிறது.  இதற்குக் காரணம் தனிப்பட்ட பயணங்களுக்காக மாநில முதல்வரும் அரசு விமானத்தைப் பயன்படுத்த முடியாது என்பதாகும். ஆகவே விதிமுறைப்படியே முதல்வர் அலுவலகம் செயல்பட்டுள்ளது.

இருப்பினும் மாநில அரசு ஆணவப்போக்குடன் செயல்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் கூறுகிறார்.  ஆணவத்துடன் யார் செயல்படுகிறார்கள் என்பது நாட்டுக்கு நன்கு தெரியும்.  டில்லி எல்லைகளில் நடந்துவரும் போராட்டத்தில் 200-க்கும்மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்த போதும் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற மத்திய அரசு தயாராக இல்லை என்பது ஆணவம் இல்லையா?

அது மட்டுமின்றி மகாராஷ்டிர சட்டமேலவைக்கு மாநில அமைச்சரவைக்கான ஒதுக்கீட்டின் கீழ் 12 பேரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன. இதுவரை ஆளுநர் இதுவரை அனுமதி அளிக்கவில்லை.  மகாராஷ்டிர ஆளுநர் மத்திய அரசால் ஆட்டுவிக்கப்படுகிறார். மத்திய அரசு அரசியலமைப்பு சட்டமும் சட்டங்களும் நிலைநிறுத்தப்பட வேண்டும் என  விரும்பினால் ஆளுநர் கோஷ்யாரியை திரும்ப அழைத்துக் கொள்ள வேண்டும்.” 

எனக் கூறப்பட்டுள்ளது