டெல்லி:

உலகின் மதிப்புமிக்க கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கரை 12 முறை அவுட்டாக்கியதாக கூறிய அக்தரின் கருத்தை நெட்டிசன்கள் சான்றுகளோடு மறுத்து கிண்டலடித்து வருகின்றனர்.

இன்ஸ்டா நேரலையில் பங்கு கொண்ட ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் என கிரிக்கெட் உலகில் அழைக்கப்படும் சோயிப் அக்தர் சச்சின் பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.

“சச்சின் டெண்டுல்கர் உலகின் மதிப்புமிக்க கிரிக்கெட் வீரர். அவருடன் விளையாடிய நினைவுகளை என்னால் மறக்க முடியாது. அவர்  எனது மிகச் சிறந்த நண்பர். அவருக்கு பந்து வீசுவது கடினம். இருப்பினும் 12 முறை சச்சினை ஆட்டமிழக்கச் செய்துள்ளேன்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

அதற்கு ரசிகர்கள் பலரும் மறுப்பு தெரிவித்துள்ளனர்.சச்சினை அக்தர் 8 முறை மட்டுமே அவுட் ஆக்கியதாக தக்க சான்றுகளுடன் கூறி வருகின்றனர். ஒருநாள் போட்டிகளில் 5 முறை, டெஸ்ட் போட்டியில் 3 முறையும் என எட்டு முறை மட்டுமே அவுட் ஆக்கியதாக கூறியுள்ளனர்.

2003 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை நினைவு கூர்ந்த அக்தர்,”அப்போட்டியில் சச்சினின் ஒரு சிக்சர் 1.3 பில்லியன் இந்தியர்களின் முகத்தில் புன்னகை மலர்க் காரணமாக இருந்தது. இந்தியர்களின் முகத்தில் அந்த புன்னகையை பார்ப்பதற்காகவே சச்சினை அவுட்டாக்க விரும்பமாட்டேன் எனவும் தெரிவித்தார்.

சில தினங்களுக்கு முன்பு இந்தியா பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் போட்டி நடத்தி கொரோனா நிதி திரட்டலாம் என அக்தர் கூறிய யோசனையை சுனில் கவாஸ்கர், கபில்தேவ் உள்ளிட்ட பலரும் அறவே மறுத்தது குறிப்பிடத்தக்கது.