இஸ்லாமாபாத்:

ஷோயப் அக்தர் கூறியது உண்மையே, என்று ஒப்புக்கொண்டுள்ள முன்னாள் பாகிஸ்தான் வீரர் டேனிஷ் கனேரியா, இதை அரசியலாக்க வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சமீபத்தில் ஊடகம் ஒன்றின் நேர்காணலில் கலந்துகொண்டு, ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் என்று அழைக்கப்படும், பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர், தங்களுடன் பணியாற்றிய  டேனிஷ் கனேரியா இந்து என்பதால், அணியில் பாகுபாட்டுடன் நடத்தப்பட்டார், அவர் அளிக்கும் உணவைக் கூட யாரும் விரும்பி சாப்பிடமாட்டார்கள் என்று மனம் திறந்து பேசியிருந்தார்.

அவரது பேட்டியில், ” கனேரியா பாகிஸ்தான் அணியில் இடம் பெறுவதைப் பல வீரர்கள் விரும்பவில்லை. ஏனென்றால் கனேரியா இந்து மதத்தைச் சேர்ந்தவர் என்பதால், அவரை யாருக்கும் பிடிக்கவில்லை, அவரின் பல்வேறு சாதனைகளுக்கும் அங்கீகாரம் கிடைத்தது இல்லை. பல நேரங்களில் அவரின் திறமையை சக வீரர்களைக் கிண்டல் செய்துள்ளனர். பல நேரங்களில் கனேரியா அளித்த உணவைக்கூட சக வீரர்கள் சாப்பிட மறுத்திருக்கிறார்கள்.

என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் 3 அணிகள் மதவாதத்தைப் பற்றி பேசும்போது நான் சண்டையிட்டு இருக்கிறேன். அதாவது கராச்சியில் இருந்து வந்தவரா, பஞ்சாபியா, பெஷாவரைச் சேர்ந்தவரா என்று கேட்கும்போது நான் கோபப்பட்டுப் பேசி இருக்கிறேன். அணியில் இந்து மதத்தைச் சேர்ந்த கனேரியா இருந்தால் கூட அவர் அணிக்காகச் சிறப்பாகச் செயல்படக்கூடியவர்தானே. இதே கனேரியா இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் போட்டியை வென்றுகொடுத்தவர்தானே.

பாகிஸ்தான் அணியில் விளையாடி ஏராளமான விக்கெட்டுகளையும், வெற்றிகளையும் பெற்றுக் கொடுத்தவர்தானே.
கனேரியா முயற்சி இல்லாமல் நாங்கள் வென்றிருக்க முடியாது. ஆனால் பலரும் அவருக்கு உரிய அங்கீகாரத்தை அளிக்கவில்லை. அணியில் இந்து வீரர் என்பதால் பாகுபாட்டுடன்தான் நடத்தப்பட்டார்” எனத் தெரிவித்தார்

பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷோயப் அக்தர் உண்மைகளைப் பேசியதற்கு டேனிஷ் கனேரியா நன்றி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

” நான் இந்து மதத்தைச் சேர்ந்தவர் என்பதால் அணியில் பாகுபாட்டுடன் நடத்தப்பட்டேன் என்று அக்தர் சொன்னது அனைத்தும் உண்மைதான்.

என்னுடைய வாழ்க்கை இப்போது நல்லவிதமாக இல்லை. என் வாழ்வில் ஏற்பட்ட குழப்பங்களைக் களையப் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தலையிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நான் பல வீரர்களை, பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகிகளைச் சந்தித்து எனது பிரச்சினைகளைக் களைய உதவி கேட்டும் கிடைக்கவில்லை. பாகிஸ்தான் வீரராக இன்றும் நான் பெருமை கொள்கிறேன்.ஆனால் இந்த நேரத்தில் எனக்குப் பாகிஸ்தான் மக்கள் உதவ வேண்டும் என்று கோருகிறேன்.

சோயப் அக்தரின் நேர்காணலைப் பார்த்தேன். பல உண்மைகளைப் பேசியமைக்காக அவருக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன். அதேசமயம், எனக்கு அணிக்குள் பலமுறை ஆதரவு தெரிவித்த வீரர்களுக்கு நான் நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டு இருக்கிறேன். ஊடகம், நேர்மையான கிரிக்கெட் நிர்வாகிகள், பாகிஸ்தான் மக்கள் அனைவருக்கும் எனது நன்றிகளைத் தெரிவிக்கிறேன். ஒரு கிரிக்கெட் வீரராக என்னை முழு மனதுடன் ஆதரித்த அனைத்து சிறந்த வீரர்களுக்கும் நான் நன்றி கூறுகிறேன். பிரச்சினையை அரசியலாக்க வேண்டாம் என்று நான் தனிப்பட்ட முறையில் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு கனேரியா தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் அணியில் இடம் பெற்ற 2-வது இந்து வீரர் டேனிஷ். இதற்கு முன் கனேரியாவின் மாமா அனில் தல்பாத் பாகிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பராக விளையாடியதாககூறப்படுகிறது. இவர்  கடந்த 2000 முதல் 2010-ம் ஆண்டுவரை பாகிஸ்தான் அணியில் விளையாடியவர் லெக் ஸ்பின்னர்  டேனிஷ் கனேரியா .இவர்  61 டெஸ்ட் போட்டிகளில் ஆடி  261 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார், அதுபோல 18 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

கடந்த 2012-ம் ஆண்டு ஸ்பாட் பிக்ஸிங் விவகாரத்தில் சிக்கிய கனேரியாவை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சஸ்பெண்ட் செய்தது. அதன்பிறகு அவர் முற்றிலும் ஒதுக்கப்பட்டார்.