டெல்லி: ஜேஎன்யூ தாக்குதலில் தொடர்புடைய கும்பலை 24 மணி நேரத்துக்குள் கைது செய்ய வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம்  வலியுறுத்தி உள்ளார்.

பிரபலமான டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நேற்று  முகமூடி அணிந்த மர்ம கும்பல் ஒன்று மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை கடுமையாகத் தாக்கியது. கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.

இதுதொடர்பான புகைப்படங்கள் மற்றும் விடியோக்கள் சமூக வலை தளங்களில் வைரலாக பரவியது. அரசியல் கட்சியினர், மாணவர்கள் அமைப்புகள் உள்ளிட்ட பலர் இந்த தாக்குதலை கண்டித்தனர்.

இந்நிலையில், முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப. சிதம்பரமும் தாக்குதலை கண்டித்துள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

இது மிகவும் ஒரு அராஜகமான சம்பவம். மத்திய அரசு, உள்துறை அமைச்சர், துணைநிலை ஆளுநர் மற்றும் காவல் ஆணையர் ஆகியோரது கண்காணிப்பில் இருக்கும் நாட்டின் தலைநகரில் இருக்கும் முக்கியமான பல்கலைக்கழகத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

வன்முறையை அரங்கேற்றியவர்களை அடையாளம் கண்டு அடுத்த 24 மணி நேரத்தில் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தவேண்டும். இதுதொடர்பாக அலுவலர்கள் மீதும் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த சம்பவத்தை விட அதிர்ச்சியான, அசிங்கமான தாக்குதல் சம்பவம் இருக்க முடியாது என்றார்.