’’கொரோனா சோதனைக்கு ஒத்துழைக்கா விட்டால்  சுட்டுத்தள்ளுங்க’


கர்நாடகத்தில் பி.எஸ்.எடியூரப்பா தலைமையிலான பா.ஜ.க..ஆட்சி நடக்கிறது.

‘ கொரோனா வைரஸ் நோய் பரிசோதனைக்கு மறுக்கும் ஆசாமிகளைச் சிறையில் தள்ள வேண்டும்’’ என்று அங்குள்ள எம்.எல்.ஏ. உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்கள் அண்மையில்  கொதித்தனர்.

அவர்களை ‘ சும்மா இருங்க..சிறுபான்மையினரைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்த வேண்டாம்’’ என்று அடக்கி இருந்தார், எடியூரப்பா.

அவர்கள் அடங்கினால் தானே?

தாவன்கரே என்ற இடத்தில் எடியூரப்பாவின் அரசியல் ஆலோசகர் ரேணுகாச்சார்யா என்பவர் நேற்று பேட்டி அளித்தார்.

பா.ஜ.க. தலைவர்களை விட ஒரு படி மேலே சென்று அவர் உதிர்த்த வாசகங்கள் இவை:

‘’ டெல்லி மாநாட்டில் பங்கேற்றோர் , உடனடியாக கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்’ என்று பிரதமர் மோடியும், முதல்வர் எடியூரப்பாவும் பலமுறை சொல்லி விட்டார்கள். அதனைப் பலர் பொருட்படுத்துவதாக இல்லை.

பரிசோதனைக்கு உடன்பட மறுக்கும், இது போன்ற தேச விரோதிகளை  அரசாங்கம் சுட்டுத்தள்ள வேண்டும். அப்போது தான் , மற்றவர்கள் ஊரடங்கு விதிகளை மதிப்பார்கள்’’ என்று பொங்கி எழ-

அனலில் தகிக்கிறது, கர்நாடகம்.

-ஏழுமலை வெங்கடேசன்