சென்னை:

செய்தியாளர் தன்யா ராஜேந்திரனை ஆபாசமாக விமர்சித்த விஜய் ரசிகர்களுக்கு தி.மு.க. செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் கண்டணம் தெரிவித்துள்ளார்.

மு.க.ஸ்டாலின் – விஜய்

நியூஸ்மினிட் என்ற ஆங்கில இணையதள இதழின் ஆசிரியர் தன்யா ராஜேந்திரன். இவர் தனது ட்விட்டர் பக்கத்தில், நடிகர் விஜய்யின் சுறா படம் குறித்து கிண்டலாக விமர்சித்திருந்தார். இதையடுத்து விஜய் ரசிகர்கள் பலர், தன்யா ராஜேந்திரனை ஆபாசமாக விமர்சித்து ட்விட்டரில் பதிவிட்டனர்.

இது குறித்து தன்யா ராஜேந்திரன் சென்னை காவல்துறை ஆணையாளரிடம் நேற்று புகார் அளித்தார். இதையடுத்து விஜய் ரசிகர்கள் இருவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தன்யா ராஜேந்திரன் மீது அவதூறு தாக்குதல் நடத்திய விஜய் ரசிகர்களுக்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து மு.க. ஸ்டாலின் தனது முகநூல்  பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:

“ஒவ்வொருவரும் கருத்து தெரிவிக்கும் உரிமையுள்ள ஜனநாயகத்தில் சகிப்புத்தன்மையின்மைக்கு இடமில்லை. பேச்சுரிமையின் குரல்வளையை நெறிக்கும் வகையில் சென்னையில் பெண் பத்திரிகையாளர் ஒருவர் மீது தொடுக்கப்பட்டிருக்கும் சமூக வலைத்தளத் தாக்குதல் மிகுந்த வருத்தத்திற்கும், கண்டனத்திற்கும் உரியது. இதுபோன்ற அச்சுறுதல்களை விடுப்போருக்கு எதிராக, சட்டத்தின் ஆட்சி முறையாக பிரயோகிக்கப்பட்டு, தவறு செய்தவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்” என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.