மங்களூரு:

குடியுரிமை திருத்தத்துக்கு எதிராக நடைபெற்ற சம்பவத்தின்போது நடைபெற்ற துப்பாக்கிச்சூடு தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் பேசிய போலீஸ்இன்ஸ்பெக்டர் இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளார். அவரை டிஸ்மிஸ் செய்யும்படி, கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா வலியுறுத்தி உள்ளார்.

இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து கர்நாடக மாநிலம் மங்களூருவில்  நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதனால் காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தி கலவரத்தை கட்டுப்படுத்தினர். இதில் 2 பேர் மரணமடைந்தனர்.

ஆனால்,  இத்தனை முறை துப்பாக்கியால் சுட்ட பிறகும் ஒருவர் கூட சாகவில்லையே என்று இன்ஸ்பெக்டர்  சாந்தாராம் என்பவர் பேசும் வீடியோ வெளியாகி வைரலானது. இது சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த இன்ஸ்பெக்டரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வந்தது.

இந்த நிலையில், அந்த இன்ஸ்பெக்டரை இடைக்கல பணி நீக்கம் செய்திருப்பதாக அரசு அறிவித்து உள்ளது.

இந்த நிலையில், போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து  கர்நாடக காங்கிரஸ் தலைவர் சித்தராமையா ஆறுதல் கூறினார்.  பின்னர் செய்தியாளர்களை சந்தித்தவர்,

இங்கு வர தனக்கு அரசு அனுமதி மறுத்தது….  தற்போதுதான் அனுமதி வழங்கி உள்ளது… ‘நான் எதிர்க்கட்சி தலைவர். எனக்கும் சட்டப்படி கேபினட் மந்திரிக்கு இணையான அந்தஸ்து கொடுத்துள்ளனர். அரசின் தவறுகளை சுட்டிக் காட்டவே எதிர்க்கட்சி உள்ளது. ஆனால் இங்கு வர எனக்கு அனுமதி மறுத்தது  ஜனநாயக படுகொலை.

குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்துவதற்கு முன்பு போலீசார்  வானத்தை நோக்கி சுடவில்லை. கண்ணீர் புகை குண்டு வீசவில்லை. திடீரென துப்பாக்கியால் சுட்டு அப்பாவிகள் 2 பேரை கொன்றுள்ளனர்.  இது அப்பட்டமான படுகொலை. இதுகுறித்து பேசிய இன்ஸ்பெக்டர் சாந்தாராமை கைது செய்து பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

துப்பாக்கியால் சுட்டு அப்பாவிகளை கொன்றவர்களை காப்பாற்றவே இந்த சி.ஐ.டி. விசாரணைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இறந்தவர்களை குற்றவாளிகள் பட்டியலில் சேர்த்துள்ளனர் என்பது துக்கமான விஷயம். தொழிலாளர்கள், மாணவர்களையும் வழக்கில் இடம் பெற செய்துள்ளனர். துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு எடியூரப்பா மற்றும் போலீஸ் மந்திரி பொறுப்பேற்க வேண்டும். நீதி விசாரணை நடத்தினால் மட்டுமே உண்மை வெளிவரும். சட்டம்-ஒழுங்கை நிலை நாட்டுவதில் மாநில அரசு முழுமையாக தோல்வி அடைந்துவிட்டது.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மங்களூருவில் மட்டுமல்ல, நாடு முழுவதும் போராட்டம் நடக்கிறது. ஆனால் கர்நாடகத்தில் 144 தடை உத்தரவு அமல்படுத்தியது சரியல்ல.

இதுகுறித்து சட்டசபை கூட்டத்தொடரில் பிரச்சினை கிளப்புவோம். துப்பாக்கிகள் இருப்பது பூஜை செய்ய அல்ல என்று மத்திய மந்திரி சுரேஷ் அங்கடி சொல்கிறார். அவர் மந்திரி பதவியில் நீடிக்க தகுதியற்றவர். அவர் மீது வழக்கு தொடர வேண்டும்.

இவ்வாறு சித்தராமையா பேசினார்.