சென்னை: சென்னை மீனம்பாக்கம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் சித்தா  கொரோனா  சிகிச்சை மையத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை திறந்து வைத்தார்.

தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தலைநகர் சென்னையில் பாதிப்பு உச்சமடைந்துள்ளது.  நோயாளிகள் அதிகரிப்பு காரணமாக, அவர்களுக்கு தேவையான படுக்கை மற்றும் ஆக்சிஜன் வசதிகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. இதற்காக வர்த்தக மையம் உள்பட பல இடங்களில் கொரோனா சிறப்பு சிகிச்சை மையங்களாக உருவாக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கொரோனாவுக்கு சிகிச்சை அளிப்பதில், சித்த மருத்துவமும் சிறந்த பங்காற்றி வருவதால், சித்தா மருத்துவ சிகிச்சை மையம் திறப்பதில் ஸ்டாலின் அரசு ஆர்வம் காட்டி வருகிறது. தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தமிழகத்தில் 12 இடங்களில் சித்த மற்றும் அலோபதி சிகிக்சை வழங்கப்படும் என தெரிவித்திருந்தார். அதனப்டி, சென்னை மீனம்பாக்கத்தில் கொரோனா சித்த சிகிச்சை மையத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தனியார் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள இந்த மருத்துவ மையத்தில் 140 படுக்கை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதில், 70 படுக்கைகள் சித்த மருத்துவத்திற்கும், 70 படுக்கைகள் அலோபதி மருத்துவத்திற்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.