சென்னை: மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தொலைக்காட்சியில் சைகை மூலமாக பாடம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல் தெரிவித்துள்ளார்.

கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாததால், பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு முறை அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஆன்லைன் வகுப்புகளால் மாணவர்களின் கவனம் சிதறுவதாகவும், உடல் ஆரோக்யம் கெடுவதாக கூறி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அப்போது, தற்போதைய சூழ்நிலைக்கு ஆன்லைன் கல்வி மட்டுமே கை கொடுக்கும் என்றும், மாணவர்களின் நலன்களை காக்கும் விதமாக வழிகட்டு முறைகளை அரசு வெளியிட இருப்பதாகவும் தெரிவித்திருந்தது. அதன்படி, ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டது.

தனியார் தொலைக்காட்சிகள் மூலம் இன்று முதல் பாடங்கள் ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. இந் நிலையில், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சைகை மூலமாக பாடம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல் தெரிவித்துள்ளார்.

100% கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.