ஒத்தக்கடை அருள்மிகு யோக நரசிம்மர் கோவில் சிறப்புக்கள்.
நன்மை, தீமை என இரண்டும் கலந்தவாறு தான் உலகம் இருக்கிறது. எப்போதெல்லாம் தீமைகளின் பலம் கூடுகிறதோ அப்போதெல்லாம் அவற்றை அழிப்பதற்கு இறைவன் பல்வேறு வடிவங்களில் வருகிறார். அப்படி தீமையின் மொத்த உருவமாக இருந்த ஹிரண்யகசிபுவை வதம் செய்வதற்காக மகாவிஷ்ணு எடுத்த ஒரு அவதாரம் தான் ஸ்ரீ நரசிம்மர் அவதாரம். அந்த நரசிம்மர் மூர்த்தி கோவில் கொண்டு பக்தர்களுக்கு அருள்புரியும் “யானைமலை ஒத்தக்கடை அருள்மிகு யோக நரசிம்ம சுவாமி திருக்கோவில்” பற்றிய தகவல்களை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
யோக நரசிம்மர் கோவில் தல வரலாறு
மிகவும் புராதனமான கோவில் இந்த யானைமலை ஒத்தக்கடை யோகநரசிம்மர் திருக்கோவில். குடைவரை கோவில்களைக் கட்டுவதில் கைதேர்ந்த பல்லவர்கள் இக்கோவிலைக் கட்டியதாகவும், பிற்காலத்தில் மதுரையை ஆண்ட பாண்டிய மன்னர்கள் பலர் இக்கோவிலை நன்கு பராமரித்து வந்ததாகவும் வரலாறு கூறுகிறது. இக்கோவிலின் இறைவனாக ஸ்ரீ யோக நரசிம்மரும், இறைவியாக நரசிங்கவல்லி தாயாரும் இருக்கின்றனர். நரசிம்மர் கோவில்களிலேயே மிகப் பெரும் நரசிம்மரின் மூலவர் விக்கிரகத்தைக் கொண்ட கோவிலாக இந்த யானைமலை ஒத்தக்கடை யோக நரசிம்மர் கோவில் இருக்கிறது.
தல புராணங்களின் படி ரோமச முனிவர் தனக்குப் புத்திர பாக்கியம் கிடைக்க வேண்டி இக்கோவிலின் சக்கர தீர்த்த குளத்தில் நீராடி யாகம் செய்யத் தொடங்கினார். அப்போது நரசிம்ம மூர்த்தியை அவரின் அவதார ரூபத்தில் தரிசிக்க எண்ணினார் ரோமச முனிவர். அவரின் ஆசைக்கிணங்க மகாவிஷ்ணு உக்கிரமான நரசிம்மர் ரூபத்திலேயே காட்சி தந்தார். நரசிம்மரின் உக்கிரத்தால் வெளிப்பட்ட வெப்பம் எங்கே அனைத்து லோகங்களையும் அழித்து விடுமோ என்று அஞ்சிய தேவர்கள் அனைவரும் சேர்ந்து மகாலட்சுமியிடம் முறையிட, லட்சுமி தாயார் வந்து நரசிம்மரை அரவணைத்ததும் அவரின் உக்கிரம் தணிந்து, யோக நரசிம்மராகக் காட்சியளித்து ரோமச முனிவர் வேண்டிய வரத்தை அளித்து ஆசிர்வதித்தார்.
யோக நரசிம்மர் கோவில் சிறப்பு:
பிரதோஷம் என்பது சிவபெருமானுக்குரிய தினமாகும். ஆனால் தேய்பிறை பிரதோஷ காலத்தில் மகாவிஷ்ணு நரசிம்ம அவதாரம் எடுத்ததால் இக்கோவிலில் தேய்பிறை பிரதோஷ தினத்தில் மிக சிறப்பான பூஜைகள் செய்யப்படுகின்றன. இச்சமயத்தில் நரசிம்ம மூர்த்தியை வழிபட்டால் கல்வி பயலும் மாணவர்கள் கல்வியில் சிறப்பார்கள். தொழில், வியாபாரங்கள் நன்கு விருத்தியாகும். துஷ்ட சக்திகளின் தாக்கம் மற்றும் மரண பயம் நீங்கும். இச்சமயத்தில் நரசிம்மரோடு நரசிங்கவல்லி தாயாரையும் வணங்கத் திருமணத் தடை தாமதம் போன்றவை நீங்கும்.
மேலும் கொடூரமான, கோபக்கார கணவர்களை அடைந்த பெண்கள் இங்கு வேண்டினால், அவர்களின் கணவர்களின் கோப குணங்கள் மாறி, மனைவி மற்றும் பிள்ளைகளிடம் அன்பாக நடக்கும் நபராக மாறுவார்கள் என்பது அனுபவம் வாய்ந்த பக்தர்களின் நம்பிக்கை. வேண்டுதல்கள் நிறைவேறிய பக்தர்கள் நரசிம்மருக்கும், தாயாருக்கும் வஸ்திரம் சாற்றி தங்களின் நன்றியைத் தெரிவிக்கின்றனர். திருவண்ணாமலை கிரிவலம் போன்று இக்கோவில் அமைந்திருக்கும் யானைமலையையும் பௌர்ணமி தினத்தன்று பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.
கோவில் அமைவிடம்:
அருள்மிகு யோக நரசிம்மர் சுவாமி திருக்கோவில் மதுரை மாவட்டத்தில், மதுரை மாநகரில் இருந்து சற்று தொலைவில் இருக்கும் ஒத்தக்கடை என்கிற ஊரில் யானைமலை அடிவாரத்தில் அமைந்திருக்கிறது. இக்கோவிலுக்குச் செல்ல மதுரை மாநகரிலிருந்து பேருந்து வசதிகள், வாடகை வாகனங்கள் வசதிகள் இருக்கின்றன.
கோவில் நடை திறந்திருக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரையிலும். மாலை 5 மணி முதல் இரவு ௮ வரையிலும் கோவிலின் நடை திறந்திருக்கும்.
கோவில் முகவரி:
அருள்மிகு யோக நரசிம்மர் சுவாமி திருக்கோவில்
யானைமலை ஒத்தக்கடை
மதுரை மாவட்டம் – 625 107