முகலிங்க மூர்த்தி.
சிவலிங்கத்திற்கென தனியானதொரு கீர்த்தி உண்டு எனலாம். சிவலிங்கத்தில் முகம் இருந்தால் நாம் அதை முகலிங்கம் என்போம். அத்தகைய முகலிங்கம் நான்கு வகைப்படும். அவை ஆட்யம், அநாட்யம், சுரேட்டியம், சர்வசமம் என்பனவையாகும்.
இதில் ஆடயம் என்பது 1001 லிங்கமுடையது. சுரேட்டியம் என்பது 108 லிங்கமுடையது. அநாட்டிய , சுரேட்டிய லிங்கங்கள் திருமுகங்களைப் பெறாதவையாகும்.சர்வசமம் என்பது ஐந்து முக வேதங்களைப் பெறும். ஈசானம், தத்புருடம், அகோரகம், சத்யோஜாதம், வாமம் என ஐந்தும் அடங்கும். முகலிங்கம் எதை விளக்குகிறது எனில் விளக்கும் ஒளியும் போலப் பிரிக்க முடியாத இறைவன் உள்ளார் என்று விளக்குகிறது.
பிரம்ம, விஷ்ணு, ருத்ர, மகேஸ்வர, சதாசிவமே முகலிங்கம் எனப்படுகிறது. இந்த ஐவரும் ஐந்தொழில்களை நடத்துகின்றவர். இவற்றிற்கு ஆதார சக்தியாக உள்ளவன் இறைவன் அவனையே நாம் முகலிங்கத்தின் மூலமாகத் தரிசிக்க முடியும்.
முகலிங்க மூர்த்தியை தரிசிக்க நமக்கு மூன்று இடங்கள் அமைந்துள்ளது.
1. திருவக்கரை
2. கச்சபேஸ்வரர்
3. கொட்டையூர்
இதில் திருவக்கரையில் அமைந்துள்ள சங்கரமௌலீஸ்வரர் கோயிலில் முகலிங்க மூர்த்தி சிறப்புப் பெற்றது. எப்படியெனில் சதுரமான அடிப் பாகத்தின் மீது அமைந்துள்ள வட்ட வடிவமான ஆவுடையாரின் மேல் மும்முகத்துடன் மூலவர் காட்சிகொடுக்கிறார். இங்குள்ள கோயில் தீர்த்தத்தில் நீராடி வில்வத்தால் அர்ச்சிக்க விரோதிகள் ஒழிந்து நட்பு பாராட்டுவர், இல்லையெனில் சிவனின் கட்டளைக்குக் கீழ்ப்படியும் வக்கிர காளியம்மன் அவர்களைக் கண்டிப்பாள். என்று நம்பிக்கை நிலவுகிறது. மேலும் பிரதோஷ காலங்களில் தும்பைப் பூ அர்ச்சனையும், சுத்த அன்னம் நைவேத்தியமும் செய்ய நல்வாழ்வு கிட்டும் என்பது உறுதி.
மேலும் காஞ்சியிலுள்ள கச்சபேஸ்வரர் கோயிலிலும் முகலிங்கம் உள்ளது. மற்றொன்று கும்பகோணம் அருகே அமைந்துள்ள கொட்டையூரில் உள்ளது. இங்குள்ள முகலிங்க மூர்த்தி மிகுந்த சக்தி வாய்ந்தவர். அவரை சக்கரையால் அபிஷேகம் செய்தால் அனைத்திலும் ஜெயம் உண்டாகும் என்பது ஐதீகம்.