சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் , வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் ‘மாநாடு’ .

கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தியாகராஜன் ‘மாநாடு’ படத்துக்கென்று பிரத்யேக ஒப்பந்தம் தயார் செய்து பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தத்தில் சிம்பு இப்படத்தில் நடிப்பதாக கையெழுத்திட்டுள்ளார்.

ஜனவரி 20-ம் தேதி முதல் ஏப்ரல் 30-ம் தேதி வரை படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. ஒளிப்பதிவாளராக ஏகாம்பரம், இசையமைப்பாளராக யுவன், தயாரிப்பு வடிவமைப்பாளராக ராஜீவன் ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.

இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பொங்கல் விழாவை முன்னிட்டு இந்தப் படத்தின் அடுத்தடுத்த அதிகாரப்பூர்வ தகவல்களை தனது சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.அதன்படி இந்தப் படத்தில் நடிகர் விஜய்யின் தந்தையும் பிரபல இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் இணைந்துள்ளார். மேலும் இயக்குநர் பாரதிராஜா, நடிகர் கருணாகரன் ஆகியோரும் மாநாடு படத்தில் சிம்புவுடன் நடிக்கின்றனர்.

படத்தில் பணியாற்றும் நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் பெயரை அடுத்தடுத்து வெளியிடப்பட்டிருக்கும் நிலையில் இன்னும் இரண்டு நாட்களில் ஒரு சர்ப்ரைஸ் காத்திருப்பதாகவும் படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடைசியாக வெங்கட் பிரபு பேசும் வீடியோ ஒன்றையும் சுரேஷ் காமாட்சி வெளியிட்டுள்ளார்.

அதில் இந்தப் படத்தில் முஸ்லிம் கதாபாத்திரத்தில் நடிகர் சிம்பு நடிக்க இருப்பதாகவும், அவரது பெயரை ரசிகர்கள் தேர்வு செய்யலாம் என்றும் கூறியுள்ளார். ரசிகர்களால் அனுப்பப்படும் பெயர்களில் தேர்வாகும் ஒரு பெயர் சிம்புவின் பிறந்தநாளன்று அறிவிக்கப்படும் என்றும் வெங்கட் பிரபு கூறியுள்ளார்.