டில்லி

டந்த 19 ஆண்டுகளில் இந்தியாவின் வறுமை பாதியாகக் குறைந்துள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

உலக வங்கி சமீபத்தில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அந்த அறிக்கையில் 2019-20ஆம் ஆண்டுக்கான இந்தியப் பொருளாதார வளர்ச்சி வெறும் 6 சதவீதமாக மட்டுமே இருக்கும் என்று தெரிவித்திருந்தது.  அத்துடன் இந்த ஆண்டின் ஏப்ரல் – ஜூன் காலாண்டில் தனியார் நுகர்வு மந்தமாகவும் தொழில் துறை, சேவைகள் துறை வளர்ச்சி குறைவாகவும் உள்ளதால் ஒட்டு மொத்த நிதியாண்டுக்கான வளர்ச்சியில் பின்னடைவு ஏற்படும் என எச்சரித்திருந்தது.

நேற்று  அதாவது அக்டோபர் 15ஆம் தேதி உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் வறுமையை ஒழிப்பதில் இந்தியாவின் செயல்பாடுகள் குறித்த விவரங்களையும், எதிர்காலத்தில் வறுமை ஒழிப்பில் சிறப்பாகச் செயல்படுவதற்கான ஆலோசனைகளையும் வழங்கியுள்ளது. கடந்த 1990ஆம் ஆண்டு முதல் வறுமை ஒழிப்பில் இந்தியா சிறப்பாகச் செயல்பட்டு வருவதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், ’இந்தியா சர்வதேச அளவில் வளர்ச்சிக்கான செயல்பாடுகளில் நெருக்கடியான சூழலில் உள்ளது.  அயினும் வறுமை ஒழிப்பிலும், காலநிலை மாற்றத்தின் விளைவுகளை எதிர்கொள்வதிலும் கடினமாகச் செயல்படுகிறது.   கடந்த 19 ஆண்டுகளில் மட்டும் வறுமை ஒழிப்பில் 7 சதவீதத்துக்கும் மேலான வளர்ச்சியை இந்தியா பதிவு செய்து தனது வறுமையைப் பாதியாகக் குறைத்துள்ளது.’

அத்துடன் இந்தியா வறுமை ஒழிப்பில் கவனம் செலுத்தும் அளவுக்கு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் எவ்வித சவால்களும் இல்லாத படி செயல்பட வேண்டும்.    உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் ஒன்றான இந்தியா தனது நிலப்பரப்பு உள்ளிட்ட மூலங்களைச் சரியாகப் பயன்படுத்தி வளர்ச்சியடைய வேண்டும்.

இந்தியா வேளாண் நிலங்களைச் சரியாகப் பயன்படுத்தி உற்பத்தியைப் பெருக்குவது, நீராதாரங்களைத் தேவையானவற்றுக்குப் பயன்படுத்துவது, காலநிலை மாற்றத்தில் உள்ள சவால்களை எதிர்கொள்வது போன்றவற்றில் முழு கவனத்தைச் செலுத்த வேண்டும்.  வேலைவாய்ப்புகளைப் பொறுத்தவரையில், ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் 1.3 கோடிப் பேர் படிப்பை முடித்து வேலைக்கு ஆயத்தமாகின்றனர்.

அவர்களில் வெறும் 30 லட்சம் பேர் மட்டுமே வேலைவாய்ப்பு பெறுகின்றனர். அத்துடன் பணியிடங்களில் பெண்களின் விகிதம் 27 சதவீதமாக மட்டுமே இருக்கிறது. ஆகவே இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு வேலைவாய்ப்பை உயர்த்துவதும், குறிப்பாகப் பெண்களின் பங்களிப்பை மேம்படுத்துவதும் அவசியம்” என்று அறிவுறுத்தியுள்ளது.