சென்னை

பிரபல பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக எம் ஜி எம் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பிரபல பாடகரும் நடிகருமான எஸ் பி பாலசுப்ரமணியம் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் கடந்த ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி எம் ஜி எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருடைய உடல்நிலை மோசமடைந்து பிறகு தேறி வருவதாகத் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் அவருடைய உடல்நிலை மீண்டும் சீர் கெட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.

இதனால் அவருடைய ரசிகர்கள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.   இன்று எம் ஜி எம் மருத்துவமனை ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில்

“திரு எஸ் பி பாலசுப்ரமணியம் கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி அன்று எம் ஜி எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இன்னும் உயிர் காக்கும் உபகரணங்களின் மூலம் சிகிச்சையில் உள்ளார்.

கடந்த 24 மணி நேரத்தில் அவர் உடல் நிலை மேலும் சீர்கெட்டு அவர் முழுவதும் உயிர் காக்கும் உபகரணங்களின் துணையுடன் உள்ளார்.

அவர் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

எம் ஜி எம் மருத்துவானை நிபுணர்கள் குழு அவருக்குச் சிகிச்சை அளித்து அவர் உடல்நிலையைக் கண்காணித்து வருகிறது”

என தெரிவிக்கப்பட்டுள்ளது,.