சென்னை:

மு.க. ஸ்டாலின் கூறியது போல் ஹவாலா பாணியில் டிடிவி தினகரன் வெற்றி பெற்றுள்ளார் என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் ஆளும் கட்சியான அதிமுகவை 40,707 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து டிடிவி தினகரன் வெற்றி பெற்று உள்ளார். திமுக டெபாசிட் இழந்தது. தேர்தலில் பண நாயகம் வென்று உள்ளது என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்துள்ளன.

இந்நிலையில் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், ‘‘ஆர்.கே.நகர் தேர்தலில் பண நாயகம் வெற்றி பெற்றுள்ளது. தேர்தல் ஆணையம் விதிகளை மதித்து நியாயமாக செயல்பட்டோம். தினகரன் வெற்றி ஆட்சியை பாதிக்காது. கட்சியில் இருந்து ஒரு செங்கல்லை கூட அவரால் எடுக்க முடியாது. தினகரன் குறுக்கு வழியில் வெற்றி பெற்றுள்ளார்.

தினகரனின் வெற்றி இடைத்தேர்தலோடு முடிந்து விடும். ஜெயலலிதாவை ஏமாற்றியர்வர்கள், மக்களை ஏமாற்றி தற்காலிக வெற்றி பெற்றுள்ளனர். பணத்தை கொடுத்து குறுக்கு வழியில் வெற்றி பெறுவது சரியானது இல்லை.

இரட்டை இலை சின்னம் மீது பற்று வைத்துள்ளவர்கள் நிறம் மாறமாட்டார்கள். குறுக்கு வழியில் வெற்றி பெறுவது தினகரனுக்கு கைவந்த கலை. ஸ்டாலின் கூறியது போல் ஹவாலா பாணியில் தினகரன் வெற்றி பெற்றுள்ளார். 2019-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறும்’’ என்றார்.