திருச்சி:

திருச்சியில் நடிகர் சிவகார்த்திகேயனின் வீட்டில் தோட்டக்காரராக வேலை பார்த்த ஆறுமுகம் கல்குவாரியில் சடலமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயனின் வீடு திருச்சி காஜாமலை பகுதியில் உள்ளது. சாத்தனூரை சேர்ந்த ஆறுமுகம் என்கிற சக்தி என்பவர் இங்கு தோட்ட வேலை செய்து வந்தார்.

இவர் கடந்த 3 நாட்களாக வேலைக்கு வரவில்லை. காரணம் என்னவென்று தெரியாமல் இருந்தது. இந்தநிலையில் காஜாமலை பகுதியில் உள்ள கல்குவாரி குட்டையில் ஆண் உடல் ஒன்று அழுகிய நிலையில் கிடப்பதை அப்பகுதி மக்கள் பார்த்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

கே.கே.நகர் போலீசார் விரைந்த சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் இறந்து கிடந்தவர் நடிகர் சிவகார்த்திகேயன் வீட்டு தோட்டக்காரர் ஆறுமுகம் என்பது தெரியவந்தது.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அவர் கல்குவாரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரேனும் கொலை செய்து வீசினார்களா என்ற கோணத்திலும் போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.