மும்பை

ரடங்கு குறித்த அறிவுரையில் ராகுல் காந்தி – ரகுராம் ராஜன் உரையாடலை சிவசேனா மேற்கோள் காட்டி உள்ளது.

இந்தியாவில் கொரோனா தாக்குதலில் மூன்றில் ஒரு பங்கு மகாராஷ்டிர மாநிலத்தில் ஏற்பட்டுள்ளது.  அங்கு இதுவரை 11,506 பேர் பாதிக்கப்பட்டு 485 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 1879 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதையொட்டி மகாராஷ்டிர அரசு ஊரடங்கு விதிகளைக் கடுமையாக்கி உள்ளது.  ஆளும் கட்சியான சிவசேனா இது குறித்து மக்களுக்கு அறிவுரை அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் சிவசேனா, “காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜனும் டிஜிடல் ஊடகம் மூலம் உரையாடிய போது ஊரடங்கு மற்றும் பொருளாதார நிலை பற்றிப் பேசி உள்ளனர்.   அப்போது ரகுராம்  ராஜன் இந்திய அரசு தற்போதைய பொருளாதார சீரழிவைச் சரி செய்ய ரூ..65000 செலவு செய்து  கொரோனாவால் ஏழை மக்கள் துயராவதைச் சீராக்க வேண்டும் எனக் கூறி உள்ளார்.

மேலும் அவர் நாடு முழுவதும் இந்த ஊரடங்கால் ஏற்பட்ட பொருளாதார சிக்கலால் கடும் பாதிப்பு அடையும் எனவும் தெரிவித்துள்ளார்.   தற்போது அரசின் முதல் கடமை ஊரடங்குக்குப் பிறகு ஏழைகள் கடும் பாதிப்படைவதை சரி செய்வதாகும் என ரகுராம் ராஜன் கூறியுள்ளார்   இந்த பொருளாதார சீர்கேட்டால் நடுத்தர மற்றும் உயர் நடுத்தர மக்களும் ஏழைகள் ஆகி விடுவார்கள்.

அவர்களும் நிச்சயம் பொருளாதார உதவி கோரும் நிலையை அடைவார்கள்  அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளிலும் தற்போது வேலை இல்லா திண்டாட்டம் அதலபாதாளத்தில் உள்ளது.    அமெரிக்காவில் உள்ளதைப் போல் இங்கு வேலையற்றோர் உதவித் தொகை அளிப்பதில்லை.   ரகுராம் ராஜன் சொன்னதைப் போல் இந்தியாவில் 10 கோடி மக்கள் வேலை இல்லாமல் ஆகி விடுவார்கள்.  இது கவனம்கொள்ள வேண்டிய விஷயமாகும்.

அவர்கள் இருவருடைய உரையாடல் மூலம் மேலும் மேலும் ஊரடங்கை நீட்டிப்பது பொருளாதாரத்துக்கு மேலும் வீழ்ச்சியை அளிக்கும்.  எனவே அரசு ஊரடங்கு விதிகளை மாற்றி அமைக்க வேண்டும்.   அதிகாரம் மற்றும் முடிவு எடுக்கும் உரிமை ஒரு சிலரிடம் மட்டும் இனியும் இருக்கக் கூடாது.

மகாராஷ்டிர மாநிலத்தில் 2019-20 ஆம் வருடம் அரசின் வருவாய் ரூ.3.15 லட்சம் கோடியாகவும் செலவு ரூ.3.35 லட்சம் கோடியாகவும் இருக்கும் எனக் கணக்கிடப்பட்டது.  ஆனால் ஊரடங்கு காரணமாக்பற்றாக்குறை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.   இதனால் மாநிலத்தை நடத்த முடியாத அளவு பொருளாதார நெருக்கடி ஏறப்படக்கூடும்.

மத்திய அரசு இந்த விவகாரத்தில் அனைவரது கருத்தையும் கேட்டு அனைவரையும் அரவணைத்துச் செல்ல வேண்டும்.   இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் இந்தியா – பாகிஸ்தான்,  ஜாதி – மதம் போன்ற விவகாரங்களை விட்டு விட்டு பொருளாதாரத்தைச் சீர்திருத்தும் பணியை நடத்த வேண்டும் பிரதமர் தலைமையில் நாடு முழுவதும் நடக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளது.